
கானகத்தினுள்
பசுமைச் சாறுபொங்க
துடிக்கிறது,
‘அல்ல, அல்ல’ என்ற உன்
சொல்லின் தாளகதி.
சற்றே
நிழல்களுள் சரிகிறேன்,
வழிதடுமாறாத களைப்பு.
எதிர்வரும் என்
வேளைகளினுள்
உன்னைச் சிறைபிடிக்கின்றன
தீர்க்க தர்சனங்கள்.
தளிரே – என்
மன எலும்பு
உன்னகத்தில் கிளைபடர
இலைமுகம் கொள்கிறாய் நீ.
நாம் எதிலும்
மறைமுகப் பொருள்களை சர்ச்சிக்க வேண்டாம்.
எது மறைபொருள்?
இந்த
உருகிய மறுப்புகளின்
உரம்தான் – அவ்வுரம்
உன்னுள் என் கிளையின் பணியாத பக்திகளாகட்டும்
பளுவற்றுச் சிறுசிறு
பச்சைச் சிறகுகளில்
எழுந்து
தத்தளிக்கட்டும்.
சிறகுகளில் சில
துடிப்பு அணைந்து
மண்வண்ணமாகும்
வீழும்… வீழினும்
உரமாகும்.
மீந்திருப்பவற்றுள்
விளைகின்றன
புதர்த்தீ இருள்கள்
உணவுகள்
விஷங்கள்
முட்கள்
முட்கள்
ஸ்தாவர மான்களும்
புலிகளும்.
நகங்கள்
என்னைக் கிழிக்கின்றன,
ஆயின் உன்
மூலிகை இலைக்கண்கள் சிகித்சையளிக்கின்றன.
கொல்லிப்பாவை – 8, 1979.
