அழகியசிங்கர்
ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன். பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாகக் குறள்களை எடுத்து அதன் கருத்துக்களைப் பலவிதமாகச் சொல்கிறார்கள் என்று. கருத்தைப் படிப்பவர்க்குத் தெளிவாகக் கூறிவிடுதற்குக் குறளே உதாரணமாகத் திகழ்கிறது. அது மட்டுமே படித்தால் போதும் என்றும் எனக்குப் படுகிறது. உதாரணமாக இந்தக் குறள் :
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
இந்தக் குறளே நமக்கு எல்லா அர்த்தங்களையும் வெளிப்படுத்தி விடுகிறது.
இதோ திருக்குறளுக்கு நாவலர் உரை தந்திருக்கிறார். அதைத் தருகிறேன்.
விருப்பும் வெறுப்பும் அற்ற நடுநிலையில் நின்று, அறிவாற்றலில் சிறந்து வாழும் சான்றோர் காட்டிய வழியில், அவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எந்த ஒரு காலத்திலும் துன்பம் ஏற்படுவது இல்லை. இந்த இடத்தில் சான்றோர் என்பவர்கள் எங்கே இருக்கிறார்கள். யாரைச் சான்றோர் என்று குறிப்பிட முடியும்? நாமக்கல் கவிஞர் இப்படிக் கூறுகிறார். இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை உணர்ந்து நாமும் விருப்பு வெறுப்பின்றி அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்போதும் துன்பப்படாது இருக்கலாம் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள விருப்பு வெறுப்பில்லாத நிலையில் இருக்க வேண்டும் என்று கூறலாமா? இந்தக் குறளில் யாண்டும் இடும்பை இல என்ற வரி பிடித்திருக்கிறது.