இது வழியல்ல
இந்த தெருவுமில்லை
அவருக்கு பிறகு நானும்
இவருக்கு அவரும்
முன்னறியா பரிமாணத்தில் கடக்கிறோம்
பொழுதை அறிவதில் ஆர்வமில்லாது போனது
ஒளியின் வண்ண இளகலை அணுகிப் பார்த்தல் போதும்
நிழல் விழுந்திருக்கும் பக்கத்திற்கு அருகிலிருக்கவே
பிடித்தமானதாகிவிட்டது
விலகிச் செல்ல நினைத்ததின் தாமதம்
இடப்பெயர்வின் துரிதமானது
நீங்கள்தானே என்றொருவர்கூட கேட்காமல் செல்கின்றனர்
இருப்பினும் அவர்கள்தான் என்பதை எவ்வண்ணம் மறுப்பது
அடுத்த அடியை எடுக்கும் முன்னர்
முந்தியோடும் நொடியின் இழப்பில்
வாழ்பொழுதின் காட்சிகள் ஒவ்வொன்றும்
இடம்மாறித் திகைக்கின்றன.


👏🏼👏🏼 நல்லாருக்கு கவிதை.