இனிக்கும் தமிழ் – 156/ டி வி ராதாகிருஷ்ணன்



இறைவனை கண்டேன்

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று” – பேயாழ்வார்

மேலே உள்ள நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடலில் பேயாழ்வார், தான் இறைவனை கண்ட
பாங்கினை விவரிக்கிறார்.

இறைவனை கண்டவர் யார்? யார் ? என கேட்கிறார்களே? இதோ கண்டேன் கண்டேன்
என்று கதறுகிறார் பேயாழ்வார்! ஆஹா என்ன அழகு! என்ன அழகு அதை எப்படி
கூறுவேன்? இதோ எங்களை நெருங்கியது எம்பெருமானல்லவா? எம்பெருமானின் அழகிய
திருமேனியை கண்டேன். ஒளி விளங்கும் கதிரவன் போல ஒளிரும் அழகிய மேனியை
கண்டேன். திருமார்பிலே திகழ்கின்ற திருமகளை கண்டேன். அசுரரை துவம்சம்
பண்ணிய பொன்னாலான அழகிய சக்ராயுதம் கண்டேன். மற்றொரு கையில் உயிர்களை
ஈர்க்கும் அன்பான பாஞ்ச ஜன்யம் என்ற வலம்புரி சங்கையும் கண்டேன்.
கடல்வண்ணனாம் எம் கடவுள் பால் என்று இத்தனையும் கண்டேன் கண்டேன்
என்கிறார் பேயாழ்வார்.

எல்லா ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஞானிகளும் மகான்களும்
கடவுளை கண்டவர்களே. நமக்கு சொன்னது நாமும் காணவேண்டும் என்பதற்காகவே.