இனிக்கும் தமிழ் – 157/டி வி ராதாகிருஷ்ணன்

கம்ப இராமாயணம் – அவனா இவன், இவனா அவன் ?

மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிக… இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.

மறு நாள், இராமன் சிவ தனுசை உடைத்தான். சீதை மாலையிட வருகிறாள்.
அவளுக்கு ஒரு சந்தேகம். நேற்று மாலை பார்த்த காளை இவன் தானா? இவன் மாதிரி இருக்கு ? ஒரு வேளை இவன் இல்லையோ ? அது வேற ஆளோ ? இருக்காது. இவன் தான் அவன் என்று அவள் மனம் கிடந்து அலை பாய்கிறது.

எப்படி அலை பாய்கிறது ..என எவ்வளவு அருமையாக கம்பன் சொல்கிறார்

அவள் காதில் ஜிமிக்கி போட்டு இருக்கிறாள். அவள் நடந்து வரும் போது அது
இங்கும் அங்கும், முன்னும் பின்னும், வலமும் இடமும் ஆடுவதைப் போல அவள்
மனம் கிடந்து ஆடுகிறதாம்.

அந்தப் பாடல்:

‘வெள்ளத்தின் சடிலத்தான்தன்
வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர.
தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை
அல்லன்கொல்? ஆம்கொல்? என்பாள்’
உள்ளத்தின் ஊசலாடும்
குழை நிழல் உமிழ இட்டார்.

பொருள்:

வெள்ளத்தின் -வெள்ளமாக பெருக்கு எடுத்து வரும்
சடிலத்தான்தன் -கங்கையை தலையில் கொண்டவனின் (சிவனின்)
வெஞ் சிலை – பெரிய வில்லை
இறுத்த வீரன் -உடைத்த வீரன்
தள்ளத் – (என்) உடல் தளர
தன் ஆவி சோர -ஆவி சோர்ந்து போக.
தனிப் பெரும் பெண்மைதன்னை-ஒப்பு உவமை இல்லாத பெண்மை தன்னை
அள்ளிக்கொண்டு – அள்ளி எடுத்துக் கொண்டு
அகன்ற காளை – சென்ற காளை போன்ற இளைஞன்
அல்லன்கொல்? -அவன் இல்லையா இவன்
ஆம்கொல்? -அவன் தானா இவன்
என்பாள் -என்று நினைப்பாள்
உள்ளத்தின் ஊசலாடும்-அவள் உள்ளத்தில் ஊசலாடும்
குழை – காதில் அணியும் ஆபரணம் (ஆபரணத்தின்)
நிழல் உமிழ இட்டார்.- நிழல் விழுவது போல
(சீதையின் முகம் அவ்வளவு பிரகாசம். அதனால் அவள் காதில் உள்ள அபரணத்தில் இருந்து ஒளி வருவதற்கு பதிலாக நிழல் விழுகிறது.)