22.10.2021 – வெள்ளி
ஆசிரியர் பக்கம்
அழகியசிங்கர்
அழகியசிங்கர் : நான் முக்கியமாக சில நூல்களை வைத்திருக்கிறேன்.
மோகினி : என்ன
அழகியசிங்கர் : 1. இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 2. சிவானந்த நடனம் – டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 3. வெ.சாமிநாதனார் எழுதிய ஹிட்லர்.
ஜெகன் : எல்லாப் புத்தகங்களையும் எந்தப் பதிப்பகம் கொண்டு வந்திருக்கிறது.
அழகியசிங்கர் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மோகினி : சிறப்பு. எந்தப் புத்தகத்தை முதலில் படிப்பீர்கள்.
அழகியசிங்கர் : ஹிட்லர்
ஜெகன் : அநுத்தமா, அ.முத்துலிங்கம் கூட்டம் நாளைக்குத்தானே?
அழகியசிங்கர் : ஆமாம்.
மோகினி : நான்கு நான்கு கதைகள் வீதம் எட்டுக் கதைகள்.
ஜெகன் : இது 22வது கூட்டம். இதுவரை 36 கதைஞர்களைக் குறித்துப் பேசியாயிற்று.
மோகினி : திரும்பத் திரும்ப சில பேர்களை மட்டும் கதைகள் பேசக் கூப்பிடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறதே?
அழகியசிங்கர் : உண்மையில் கதைகளைச் சரியானபடி புரிந்துகொண்டு பேசுபவர்கள் சிலர் மட்டும் இருக்கிறார்கள். சிலர் ஆர்வத்தில் கலந்துகொண்டாலும் பேசத் தடுமாறுகிறார்கள். பெரிய வட்டம் இல்லை இது. முகநூல் மூலம் யாரைக் கூப்பிட்டாலும் பேச வருபவர்கள் சில பேர்கள்தான்.
மோகினி : அவ்வளவு சுலபமில்லை.
ஜெகன் : நீங்கள் தேர்ந்தெடுத்த இரண்டு சிறுகதை ஆசிரியர்களும் சிறந்தவர்கள். அநுத்தமா அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 100வது ஆண்டை நிறைவு செய்கிறார். 300 கதைகள் எழுதியிருக்கிறார். அ.முத்துலிங்கம் என்ற எழுத்தாளரும் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதியிருப்பார். சாதனை புரிந்திருக்கிறார்.
அழகியசிங்கர் : பேசக் கூடியவர்களில் 3 பேர்களில் அ.முத்துலிங்கத்தின் தீவிர வாசகர்கள். அவர்கள் எழுதவும் செய்வார்கள்.
மோகினி : நாளைக்கு அணி திரள்வோம்.
ஜெகன் : இன்றைய சொற்பொழிவை முடித்துக்கொள்வோம். அழகியசிங்கர் : ஆமாம்.