துளிப்பாக்கள்/சா. கா. பாரதி ராஜா

மழை பெய்ய இருக்கிறது
பலவண்ணக் குடையை விரித்தது
வானம்

தடாகத்தில் இலைகளின் கீழே
கொட்டிக் கிடக்கிறது வானம்
கையால் அள்ளுகிறான் சிறுவன்

கொத்தும் மரங்கொத்தி
பறந்தோடியது
மரம் அறுக்கும் மனிதர்கள்

தாயின் தாலாட்டு
கேட்டு உறங்கும் குழந்தை
முகத்தில் கடவுள் தெரிகிறார்

சங்கை ஊதிய சிறுவன்
இரசிக்கிறான்
அமைதியாகும் கடலலைகள்

கதையை சொல்கிறாள் பாட்டி
ஆர்வமாக கேட்கும் இன்னொரு பாட்டி
முதியோர் இல்லம்

கீழே விழுந்த விளக்கு
மின்னல் மின்னியதும் ஒளிர்கிறது
பல விளக்குகளாக