காஞ்சி மடத்தில் ஒருநாள்.

.

🕉️ காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது. அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.
அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு “கோவிந்தா’ என்று பெயரிட்டு அழைத்தார் பெரியவா.
ஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, பெரியவா காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக் கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து விட்டார்.
தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவாவிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர்.ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார்.
“நாராயண அய்யரே! என்ன தேடறீர்…. நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ… என்ற பெரியவா, “போங்கோ… போங்கோ.. ஆத்துல போய் தேடிப் பாருங்கோ…. நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்….” என்றார்.
விறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார்.
தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.
ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.
பெரியவா அதனிடம் அன்புடன், “”கோவிந்தா ….. உனக்கு பசிக்கலையா… எங்கே போயிட்ட….” என்று கேட்க, அய்யரும் “”ஐயோ குரங்கு …பத்திரம்…. பத்திரம்….” என பதட்டத்துடன் ஓடி வந்தார்.
பெரியவா அவரிடம், “பயப்படாதீங்கோ…. குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு” என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி…அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த பெரியவா, அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார். 🍁