டிசம்பர் 5: ஸ்ரீஅரவிந்தர் ஸித்தி தினம்/
திருப்பூர் கிருஷ்ணன்


அரவிந்த அமுதம்!


…………………………….
*அலிப்பூர் சிறையில் தவம் நிகழ்த்தினார் ஸ்ரீஅரவிந்தர். ஓராண்டுத் தவம். சிறையிலேயே கிருஷ்ண தரிசனம் பெற்றார். சிறையில் பிறந்தவன் தானே கண்ணன்? அவனுக்குச் சிறையில் தரிசனம் தருவது சிரமமா!

ஸ்ரீஅரவிந்தருக்கு பகவத்கீதையை போதித்தான் கண்ணக் கடவுள். கண்ணனிடம் கீதையை நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். ஒருவன் அர்ச்சுனன். இன்னொருவர் அரவிந்தர்.

அர்ச்சுனனுக்குக் கீதை சொன்னபோது நடந்தது மகாபாரதப் போர். அரவிந்தருக்குக் கீதை சொன்னபோது நடந்தது சுதந்திர பாரதப் போர். அப்போது கீதை சொன்ன இடம் போர்க்களம். இப்போது கீதை சொன்ன இடம் சிறைத்தலம்.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் அளித்தது விஸ்வரூப தரிசனம். அரவிந்தருக்குக் கண்ணன் அளித்ததோ விஸ்வமெல்லாம் தானே என்ற தரிசனம். உலகம் முழுவதையுமே கண்ணனாகக் காணும் பாக்கியம் பெற்றார் அரவிந்தர்.

வானில் பறக்கும் பறவைகளையும் மண்ணில் ஊர்ந்துசெல்லும் எறும்புகளையும் மரத்தில் காணும் இலைகளையும் கண்ணன்களாகக் கண்டு அதிசயித்தார்.

அரவிந்தர் சிறையிலிருந்தபோது சக கைதியாக இருந்தவன் உபேந்திரநாத் பந்தியோபாத்யாய் என்பவன். அவனுக்கு ஓர் ஆச்சரியம். அரவிந்தருக்குத் தலைக்குத் தடவிக்கொள்ள யாரேனும் ரகசியமாக எண்ணெய் கொண்டு தருகிறார்களா? அவர் தலைமுடி மட்டும் சிக்குப் பிடிக்காமல் மினுமினுவென்று இருக்கிறதே?

சந்தேகத்தை அரவிந்தரிடமே கேட்டுவிட்டான். தாவரங்கள் இயற்கையிலிருந்தே தங்களுக்குத் தேவையான சக்தியை எடுத்துக் கொள்வதுபோல் என் தலைமுடியும் அவ்விதம் எடுத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றுவிட்டது போலும்! எனப் பணிவோடு பதில் சொல்லியிருக்கிறார் அரவிந்தர்.

சிறையிலிருந்து விடுதலையான பின் உத்தர்பாரா என்ற இடத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார் அவர். அப்போது சிறையில் தனக்குக் கிருஷ்ண தரிசனம் கிடைத்த செய்தியை மேடைப் பேச்சில் மிகுந்த பணிவோடும் நேர்மையோடும் பதிவு செய்தார். ஏராளமான மக்கள் அவரது பேச்சையும் அதில் சொல்லப்பட்ட செய்தியையும் கேட்டு பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

அரவிந்தர் கிருஷ்ண தரிசனம் பெற்ற செய்தி நாளிதழ்கள் மூலமாக பாரதியாருக்குக் கிடைத்தது. அப்போது புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார் மகாகவி.

கண்ணன் பாட்டு எழுதிய தனக்குக் கிடைக்காத கிருஷ்ண தரிசனம் அரவிந்தருக்குக் கிடைத்ததை எண்ணி மலைத்தார். பின்னர் ஒரு நிருபரை கொல்கத்தாவுக்கு அனுப்பி நேரில் விசாரித்து அரவிந்தர் கிருஷ்ண தரிசனம் பெற்றதை உறுதிப்படுத்திக் கொண்டார். அரவிந்தர் மேல் மிகுந்த மரியாதை கொண்டார்.

அதனால்தான் பின்னாளில் ஸ்ரீஅரவிந்தர் கப்பலில் புதுச்சேரி வந்தபோது அவரை வரவேற்று அவருக்குத் தங்குவதற்கு தன் நண்பர் சங்கரன் செட்டியார் மூலம் வீடு பார்த்துக் கொடுத்தார்.

இந்நாளில் ஸ்ரீஅரவிந்தரை வழிபட்டால் வீடுபேற்றையே அடைய முடியும் என அரவிந்த அன்பர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட மகானுக்குத் தங்குவதற்கு புதுச்சேரியில் வீடு பார்த்துக் கொடுத்த பெருமை நம் மகாகவிக்கு உரியது.

சுதந்திர எழுச்சியைத் தட்டி எழுப்பக் கூடிய உன்னத மேடைப் பேச்சாளரான அரவிந்தரை சுதந்திரப் போர்ச் சூழலிலிருந்து இழக்க மகாத்மாவுக்கு விருப்பமில்லை.

லாலா லஜபதிராய், தேவதாஸ் காந்தி ஆகியோரை தனித்தனியே இருவேறு சந்தர்ப்பங்களில் அரவிந்தரிடம் அனுப்பினார் மகாத்மா. மறுபடி சுதந்திரப் போர்ப் பேச்சாளராக அரவிந்தர் இயங்கவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஆனால் அரவிந்தர் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால் மகாத்மாவுக்கு ஒன்று சொல்லி அனுப்பினார். தான் ஸ்தூல உருவில் சுதந்திரப் போரில் முன்போல் கலந்துகொள்ளவில்லை என்றாலும், சூட்சுமமாக தியானத்தின் மூலம் சுதந்திரம் கிடைப்பதற்காகவே உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, தான் தியானத்தின் மூலம் சுதந்திரம் பெறுவதற்கு உழைத்து வருவது உண்மை என்பதைக் கண்ணக் கடவுள் சுதந்திர வரலாற்றில் எவ்விதமேனும் முத்திரை பதித்துச் சொல்வான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்ன ஆச்சரியம்! பல ஆண்டுகள் கழித்து பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தபோது அது தற்செயலாக ஸ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளாக அமைந்தது. அது தற்செயல் தானா?

அரவிந்தரின் தியான நெறி புதுச்சேரியில் வளர்ந்தது. மகாகவி பாரதியார், வ.வே.சு. ஐயர் உள்ளிட்ட பலர் அவருடன் தியானம் பழகினார்கள்.

ஒருநாள் புதுச்சேரி முழுவதும் இன்னதென்றறியாத ஒரு நறுமணம் கமழ்ந்தது. என்ன நறுமணம் இது என திகைப்போடு ஸ்ரீஅரவிந்தரை வினவினார் ஜெயடேவி என்ற சாதகர்.

`விண்ணிலிருந்து தெய்வீக சக்தி மண்ணில் இறங்குகிறது, மனிதனை அதிமனிதனாக்க வல்ல சக்தி அது. அந்தச் சக்தி இறங்கும் நேரம் இத்தகைய நிகழ்வுகள் தோன்றுவதில் ஆச்சரியமில்லை!` என அரவிந்தர் பதில் சொன்னார். 

மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை அடையும் நாளைத் துரிதப்படுத்தவே தாம் தவம் செய்துவருவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அரவிந்த§¡¡டு தங்கியிருந்த அம்புபாய் புரானி என்ற அன்பர் மூன்றாண்டுகள் தன் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருநதார். பின்னர் அவர் புதுச்சேரி திரும்பி அரவிந்தரை தரிசித்தபோது வியப்பில் ஆழ்ந்தார். காரணம் மாநிறமாக இருந்த அரவிந்தர், இப்போது பொன்னிறத்தில் ஒளிவீசிக் கொண்டிருந்தார்.

எப்படி வந்தது இந்தத் தங்க நிறம் என திகைப்போடு கேட்டபோது, தெய்வ சக்தி மனித உடலில் இறங்கும்போது நேரும் புற விளைவுகள் குறித்துப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றார் அரவிந்தர்!

பிரசண்ட விகடன் என்ற முன்னோடித் தமிழ் இதழை நடத்திய முதுபெரும் எழுத்தாளர் அமரர் நாரண துரைக்கண்ணன் அரவிந்தர் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

அதில் அரவிந்தரின் வலது காலில் மட்டும் மெலிதாக ஒரு கறுப்பு நிற நரம்பு தெரிவதாகவும் மற்றபடி அரவிந்தரின் வடிவம் முழுவதும் தங்க நிறம் பெற்றுவிட்டதாகவும், அந்த நரம்பும் தங்க நிறம் பெற்றுவிட்டால் அரவிந்தர் உற்சவ மூர்த்திபோல் ஆகிவிடுவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான கு.ப.ராஜகோபாலனும் அரவிந்தர் குறித்து அரவிந்தர் வாழ்ந்த காலத்திலேயே ஒரு நூல் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஅரவிந்தரை அவர் காலத்தில் பெரும் ஆன்மிக சக்தியாக இனம் கண்டு கொண்டாடிய இந்தியக் கவிஞர்கள் இருவர். ஒருவர் நோபல் பரிசுபெற்ற வங்கக் கவிஞர் தாகூர். இன்னொருவர் மக்கள் அன்பைப் பெற்ற தங்கக் கவிஞர் நம் பாரதி.

தாகூர் அரவிந்தரை விட வயதில் மூத்தவராக இருந்தும் அரவிந்தா உனக்கு நமஸ்காரம் என அவரை வணங்கியிருக்கிறார்.

அரவிந்தர் ஸித்தி அடைந்தபோது அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டார் என்றே மருத்துவ அறிக்கை சொல்லிற்று. ஆனால் மருத்துவர்களே பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அரவிந்தரின் உடலில் நிகழ்ந்தது. சுமார் 111 மணிநேரம் ஸ்ரீஅரவிந்தரின் உடலில் அவர் காலமானதற்கான எந்தப் புற அறிகுறியும் தென்படவில்லை. ஒரு பொன்மயமான ஒளி அந்த உடலைச் சுற்றி மெலிதாகப் படர்ந்திருந்தது.

அந்த ஒளி விலகுவதற்காக ஸ்ரீஅன்னை காத்திருந்தார். அன்னையின் மனத்தில் அடக்கம் செய்விக்கலாம் என உத்தரவு கிடைத்த பின்னரே அவர் ஸ்ரீஅரவிந்தரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தார்.

அரவிந்தரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, ஸ்ரீஅரவிந்தரே! தெய்வ சக்தியை மண்ணில் இறக்க வேண்டும் என வாழ்நாள் முழுதும் உழைத்தீர்களே, இனி அந்தச் செயல் எவ்விதம் நடக்கும்? என ஓர் அன்பர் கண்ணீரோடு வேண்டினார். அப்போது ஹொபே ஹொபே ஹொபே என அவர் காதில் ஸ்ரீஅரவிந்தரின் குரல் கேட்டது. ஹொபே என்ற வங்காளச் சொல்லுக்கு நடக்கும் என்பது பொருள்.

தெய்வ சக்தி மண்ணில் இறங்க வேண்டுமானால் மனிதர்கள் தூய தவ வாழ்வு வாழவேண்டும். தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் நிறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை உலகில் அதிகமாகும்போது தெய்வ சக்தி மண்ணில் இறங்குவது சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

பிரான்ஸ் தேசம் பிறப்பால் என் தாய்நாடு. ஆனால் இந்தியாவை அதன் சிறப்பால் என் தாய்நாடாக நான் தேர்வு செய்துகொண்டேன்! என்றார் ஸ்ரீஅரவிந்த அன்னை. (France is my country by birth. India is my country by choice.).

ஆனால் பிறப்பாலேயே இந்தியா நம் தாய்நாடாக நமக்கு அமைந்திருக்கிறது. இந்த பாக்கியத்தை எண்ணிப் பெருமைப் படுவோம். தெய்வீக சக்தி மண்ணில் இறங்கும் வகையில் தூய வாழ்வு வாழ முயல்வோம். மதுவும் லஞ்சமும் இல்லாத எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம்.

(நன்றி: தினமணி நாளிதழ்)