மீண்டும் பிறப்பெடு பாரதி!/செல்வி பிரகாஷ்

எட்டயபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?

பறவைகளையழைத்தான்
பாழும் சாதிகளை அறுத்தான்.

கண்ணனை அழைத்தான்
காதலில் நெகிழ்ந்தான்.

தனியாதச்சுதந்திரத்தின்
தாங்காத தாகத்தை
தவிப்போடுக்கவிதையில்
தாங்கியேக்கொடுத்தவன்.

அவன் முண்டாசின் மூலைகளிலெல்லாம்
மூடநம்பிக்கைகளை முடித்துவைத்தான்

காசளவுப் பொட்டுக்குள்
காதலையடைத்தான்

அவன் மீசையின் நெளிவுகளில்
மீட்டெடுத்தான் பெண்மையை

அவன் வாழ்க்கைச் சொல்லும்
உறங்காத உணர்ச்சிகளை.

தமிழ் நின்று கதறும் அவன்
தன்மான எழுச்சியிலே.

புதுயுகம் கண்டது பூமியல்ல.
புதுமையானப்பெண்கள்

அவன் தேகமெல்லாம்
உயிராகிச்சுட்டது,
தேடுகின்ற இன்பமல்ல.
தேசியத்தின் சுதந்திரம்.

சாத்திரங்கள் அவனுக்குச்
சாக்கடையானது

சாதியங்கள் இல்லாமை அவனால்
சாத்தியமானது.

பார்க்குமிடமெல்லாம்
இறைவனைப்பார்த்தவனே!

பாசாங்கு இல்லா உன் வாழ்க்கை
பாடமானது பெரிதொன்றுமில்லை.

உயிரெழுத்து ஒவ்வொன்றையும்
ஆயுத எழுத்தாக்கினாய்.

ஆளுமையின் வார்த்தைகளை
வாளாக்கினாய்

வெள்ளையனை ஒழிக்கும்
வேலாக்கினாய்.

இன்னும் ஒரு முறை நீ பிறப்பெடு
இறுக்கிய அவலங்களை
அறுத்தெடு.

புதுயுகத்தில் இன்னும் பெண்கள்
கசக்கப்படுவதைக்
களைந்தெறி.

நாட்டுக்குள்ளே அடிமைப்படுத்தும்
நாட்டு நரிகளை வேட்டையாடத்
தமிழென்னும் சாட்டையெடு.

உன் தாய் நாடு அழுதபடி கேட்கிறது

மீண்டும்
பிறந்துவா!
பாரதி!