ஒரு துளியில் நிரம்பும் கடல் /அனங்கன்

தோல்வியின் முகத்தில் விழித்தெழுந்தபின் …
தொடர்கிறது என்றும் போல்
வாழ்க்கை.

கவலைகளை அடைகாத்து
ஒன்றும் ஆகப்போவதில்லை.

பெரிதென விரிந்தவானம்
சன்னல் கம்பிகளிடையே
அடைபட்டுக்கிடப்பது பார்வையில்தான்.

தீநுண்மி மீண்டும் வருவதாய்ப்
பரபரப்பு….
பலரது வாழ்வைப் புட்டிப்போட.

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு
அழைக்கின்றன மின்னும் விளம்பரங்கள்.

அவரவர் கவலைகள்…
மகிழ்ச்சிகளைச்
சுமந்தபடி கடந்துபோகின்றன
பலவகை வாகனங்கள்.

பேருந்துக்காய் காத்திருக்கும் வேளையில்…
இரக்கும் அந்த அந்தகரின்
பாட்டின் இசையில் எனக்குள்
துள்ளல் பிறக்கிறது….

ஒரு துளித்தேன் சுவையில்
வாழ்வை நிரப்பிட அந்தக்கணம்
மட்டுமே முடிகிறது.

மீண்டும் வெறுமை சூழ்வதற்குள்
அந்தத் துள்ளல் உறைந்துபோக
எந்த வழியுமில்லை.