
இன்று 96 வது விருட்சம் கவிதை நேசிக்கும் நிகழ்வில் நான் வாசித்த கவிதை கீழே.
அழைப்பு மணியை
அழுத்தியபடியே
ஆரம்பிக்கும் கவிதை,
காபி குடித்தபடி,
பால்கனியில் நின்றபடி,
ஊஞ்சலில் ஆடியபடி,
தொடர்ந்து பின்
மின்தூக்கிக் கதவைத்
திறந்து வைத்தபடி
பொழிந்து கொண்டிருக்கும். ,
எனக்கென்னவோ
கண் படித்து மனம் கேட்கும்
கவிதை பிடிக்கிறது.
ஜன்னலோர மேசையிலமர்ந்து
வான் நீலம், இலைப்பச்சை, பார்த்தபடி,
பறவைகளின் கீதம் கேட்டபடி,
கவிதை படிக்க, படைக்கப்
பிடிக்கிறது.
இப்படி உள்நுழைந்த
நொடி தொடங்கி
கவிதை, இலக்கியம் பேசும்
என் அம்மாவின் தோழரைப்
பிடிக்கவில்லை.
கவிதை மட்டும்தான் அதன்
காரணமாவெனத் தெரியவில்லை.
