
இன்று காலை ஒரு கனவு,
என் தந்தை இறந்து விட்டதாக.
கட்டப்பட்ட கால்கட்டை விரல்கள்
தெரிகிறது, இடுகாட்டுக்குச் செல்லும் வண்டியில்
அலங்கரிக்கப்பட்ட உடல்; ஆம் என் தந்தையுடையதுதான்!
அருகில் சென்று பார்க்கிறேன்…
அழுகையை அடக்க முடியாமல் விசும்புகிறேன்…
விசும்பல் மேலும் தீவிரமடைந்து அழுகையாக
மாறுகிறது.
தீவிர அழுகையிலும் என் முகம்
எப்படியிருக்குமென ஒரு
கால இடமற்ற, விவேகமற்ற ஆசை.
திடீரென, என் பின்புறம் தோள்களை ஆறுதலாக
அழுத்துகின்றன கைகள்!
‘சரி விடு… சரி விடு…ஒண்ணுமில்ல
சரி விடு’ என்று ஒரு குரல்
திரும்புகிறேன்… என் தந்தை!
