ஆசாரக் கோவை/ வளவ. துரையன்


பாடல் 15 : தன்னுடல் போல் போற்றத் தக்கவை

ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்.

பொருள் :
பூமி முதலான ஐந்து பூதங்களையும் அந்தணரையும் பசுக்களையும் சந்திரனையும் சூரியனையும் தன்னைப்போலக் கருதிப் போற்றாது ஒருவன், இகழ்வானெனில் அவன் உடம்பில் உள்ள ஐந்து பூதங்களுக்கான தெய்வங்கள் அன்றே அவனைவிட்டுப் போய்விடும்.

பாடல் 16 : ஐந்து குருமார்கள்

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர் இவரைத்
தேவரைப் போல தொழுதொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.

பொருள் :
அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தனக்கு மூத்தவன், இவர் ஐவரும் ஒப்பற்ற குரவர் ஆவர். இவரை தெய்வத்தை போல வணங்கிப் பின்பற்றுக என்பது அறமறிந்தவர் அனைவரும் சொல்லிய நெறி.

பாடல் 17 : தவிர்க்க வேண்டியன சில

குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மென்கோலும் தின்னார்; மரங்குறையார்
என்பதே நல்லறி வாளர் துணிவு.

பொருள் :
நல்ல அறிவுடையவர்கள் முன்சொன்ன குருமார்கள் வாக்கை இகழ்ந்து நடக்க மாட்டார்; விரதம் முடிக்கப்படாமல் இருந்தால் அதை மறந்து விடமாட்டார்; பௌர்ணமியன்று பல் துலக்க மரக் குச்சிகளை உடைக்க மாட்டார்; அன்று மரங்களையும் வெட்ட மாட்டார்.