ஓட்டம்/நா.விச்வநாதன்

அரைக்கால் டிராயர்
நழுவி விழுவதுகூடத்
தெரியாமல் ஓடியது
இன்னும் தொடர்கிறது.

ஏழேழ் உலகங்களிலும்
இடமில்லை எனக்கென்ற
அறிவிப்பு வருகிறது.

என்னதான் செய்வது?

இப்போது கிரீடம்
தரித்திருக்கிறேன்.
உடைவாளும் உண்டுதான்.
பட்டுடைகள் அமோகம்.

மந்தகாசச் சிரிப்பு,
அந்தப்புர ராணிகள்-
அதில்பாதி கவர்ந்து
சேர்த்தது.

ஆனாலும் கால்கள்
நிற்பதில்லை.
அறிவிக்க ஏதுமில்லை
என்ற தத்துவம்
அச்சம் தருகிறது.

மகிழம்பூ பரவிக்
கிடக்கும்
நெடுந்தெருவில்
பாதங்கள் அழுந்த
என்ன ஓட்டம்?

இதைவிட
இன்னொரு இடம்
எப்படிச் சுலபமாக
இருக்க முடியும்?
எல்லா அறங்களிலும்
இருக்கிறது தீர்வு..

ஏதும் புரிந்து
சொல்வதில்லை.
என் வாழ்வென்பதே

ஓட்டம்தான்.