விருட்சம் 97வது கவிதை நேசிக்கும் நிகழ்வில் இன்று (17.02.2023) ஆர்.வத்சலா அவர்களின் கவிதை கீழே.

மனதிலெழுந்த கவிதையை
திறன்பேசியின் உதவியுடன்
புலனத்தில்
குரலால் தட்டச்சு செய்து
அதை மடிகணினியில்
சொல் கோப்பாக
இடம் – உரு மாற்றி
மனம் திருப்தி அடையும் வரை
செதுக்கி
செதுக்கி
அதற்கு தேதி – நேரம் வாரியாக
ஒரு அடையாளத்தை வழங்கி
பொருத்தமான மென்பொருள்
கோப்புறையில் போட்டு
நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்
காத்து
நிற்கின்றன
பொறுமையாக
என் கவனத்திற்காக
நினைவு வாயிலில்
ஓரிரு கவிதைகள்
என்னுடைய நன்றிக்கு
பாத்திரமாய்
ஆனாலும்
தவிர்க்க முடியவில்லை
பொறுமையற்றுத்
திரும்பி விட்ட
அகங்காரக் கவிதைகளை
‘போனால் போயேன் ‘
என ஒதுக்குவதற்கு பதில்
அவற்றுக்காக
ஏங்குவதை.

அருமை அருமை
ஆம். ஏக்கம் மட்டும் தங்கிவிடும் மீண்டு வராத மன ஆழத்தில் சிக்குண்ட எழுத்துக்களுக்காக..