அறுந்த செருப்பு /வளவ. துரையன்

(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை)

காதைக் குடைந்துவிட்டுத்
தூக்கிப்போடும் குச்சியாய்
என்னை வீசி எறியாதே.

சுளையை உரித்துத்
தின்றபின்
எறிந்து விடுகின்ற
தோலென்றே
என்னை நினைக்காதே.

மை தீர்ந்தபின்
இனி எழுதவே முடியாதென
நினைத்து எறிகின்ற
பேனாவன்று நான்.

கைப்பிடி அறுந்த பையை
மீண்டும் தைத்து
வைத்துக் கொள்ளலாம் கண்ணே!

அறுந்து போன
செருப்பு கூட
தைத்து வைத்துக் கொண்டால்
தக்க காலத்தில்
கைகொடுக்கும் அன்றோ?

தைக்க ஊசி நூலைவிட
முதலில் மனம்தான் தேவை.