நம் சக குரங்கினங்கள் நம்மை விட வலிமையானவையா?/நியான்டார் செல்வன்

இதை சோதிக்க பெர்மன் என்பவர் முடிவு செய்தார். ஒரு புகழ்பெற்ற ஆய்வில் சின்சினாட்டி ஜூவில் உள்ள சிம்பன்சியை டைனோமீட்டர் எனும் கருவியை பிடித்து இழுக்க வைத்தார். சிம்பன்ஸி நாம் சொல்வதை எல்லாம் கேட்குமா என்ன? அது தன் இஷ்டத்துக்கு இழுத்தது. ஆனால் அதன் இழுவை சக்தி இரு கரங்களில் 572 கிலோ என டைனோமீட்டர் காட்டியது. ஆனால் போமா எனும் இன்னொரு சிம்பன்ஸி அனாசயமாக ஒரே கையால் 385 கிலோ இழுவை சக்தியை காட்டியது.

அதன்பின் அமெரிக்காவின் புகழ்பெற்ற புட்பால் வீரர்களை வைத்து அதே பரிசோதனை நடத்தபட்டது. அவர்கள் மிக ஆஜானுபாகுவாக இருப்பார்கள். சராசரியாக 130 முதல் 140 கிலோ எடையுள்ள மனிதர்கள். அவர்கள் யாராலும் ஒரு கையால் 90 கிலோவுக்கு மேல் இழுக்க முடியவில்லை, இரு கையால் இழுத்தபோது 227 கிலோ. அதிலும் சிம்பன்ஸி இழுத்தது போல கண்டபடி இழுக்காமல் ஸ்ட்ராடஜிக்கலாக திட்டமிட்டு இழுத்தும் இந்த நிலை.

இதற்கும் சிம்பன்ஸியின் சராசரி எடை 60 கிலோ தான்.

இழுவை சக்தி என மட்டும் இல்லை. நாலுகாலில் வெறும் காலில் ஓடும் சிம்பன்ஸியிடம், நைக்கி சூ அணிந்து ரப்பர் மைதானத்தில் ஓடும் உசைன்போல்ட் அவமானகரமாக தோற்பார். நம் எடையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள போனபோ உயரம் தாவும் போட்டிக்கு வந்ததென்றால் அனைத்து ஒலிம்பிக் மெடல்களும் அதற்குத்தான். உலகசாதனை அளவை விட மூன்றில் ஒரு பங்கு உயரம் அதிகமாக குதிக்ககூடியது போனபோ.

ஆக ஏப் இனங்கள் அனைத்திலும் மிக கேவலமான உடல்வலுவுடன் இருப்பது மனிதந்தான்.

ஆனால் தற்போது வரும் ஆய்வுகள் இது எப்போதுமே இப்படி இருந்ததில்லை என கூறுகின்றன

150,000 ஆன்டுகளுக்கு முந்தைய மனிதன் சிம்பன்ஸி, உராங்குடான் ஆகிய குரங்குகளுக்கு ஒப்பான வலிமையுடன் திகழ்ந்தனாம். அவனது எலும்பின் அடர்த்திக்கும் இக்குரங்குகளின் எலும்பின் அடர்த்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லையாம்.

அதே விவசாயகாலகட்டம் தொடங்கியபின் நம் எலும்பின் அடர்த்தி 20% குறைந்துவிட்டதாம். மூன்றுமாதம் விண்வெளியில் தங்கி இருப்பதற்கு ஒப்பானதாம் இது. விண்வெளியில் தங்கி இருந்தால் புவியீர்ப்பு விசை இன்றி எலும்புகள் கடும் பலவீனம் அடையும்.

இதற்கு சொல்லபடும் காரணம் விவசாய காலகட்ட உணவுகளும், உடல்பயிற்சியின்மையும்.

அந்த ஆய்வுகட்டுரையின் தலைப்பே இப்படி துவங்குகிறது…”மனிதர்களின் எலும்புகளின் எதிர்காலம் மிக கவலைக்குரியது” என