பல்லியை நம்பி/ ஆர் வத்ஸலா

பல்லி நம்பி
வாழ்கிறான் அவன்
ஏதோ ஒரு ஆசை
ஒரு நம்பிக்கை
முன்பு அப்படி இல்லை

காத்துக் கொண்டிருக்கிறான்
என்றாவது
அது தன் தலையில் விழாதா
என்று
உச்சந்தலையில் விழுவது அசாத்தியம்
ஆகவே இரண்டாம் பட்சமாக
நெற்றியில் விழலாம்
எந்த பாகமும் சரி
சாஸ்திரம் எல்லாவற்றிலும்
கொஞ்சம் முன்பின் தானே
பலிக்கிறது

மனைவி வருகிறாள் தினமொரு முறை
கண்ணீர் வடிக்க
மகன் அவ்வப்போது ஆயாசத்துடன்
அவனுக்கு பணி பளுவாம்

மகளுக்கு மனசு தாங்க முடியாததால்
மருமகன் தடுக்கிறானாம்

பேசிக் கொண்டார்கள்

கால்கள் நீட்டியபடி
ஒரே நிலையில்
அவன் விழுந்த நாள் முதல்

வாய் இறந்து விட்டது அன்றே

காது துல்யம்
ஆனால்
அது அவர்களுக்குத் தெரியாது
இப்போதெல்லாம் அவனுக்குப் பிடித்த பாட்டு போடுவதை நிறுத்தி விட்டார்கள்

கண் திறக்க முடிந்தாலும் பார்வை நிலை குத்தி இருப்பதால்
பார்வையில்லை என
நினைக்கிறார்கள்

நாற்றமெடுக்கிறதென
மனைவி கத்திய பிறகு ஒழுங்காக உடம்பு துடைத்து விடுகிறாள் செவிலி
அடுத்த ஒரு மாதத்திற்கு

மூச்சுக் குழாயையும்
உணவூசிக் குழாயையும்
பிடுங்கியெறிய
துடிக்கின்றன
அவனது செத்த கைகள்

மூளை உயிருடன் –
ஆதலால் பிடுங்க
அவர்களுக்கு அனுமதி இல்லை

காத்திருக்கிறான் மல்லாந்து படுத்து
பல்லிகளை நம்பி
முடமாய் மூடமாய்