இரண்டு வரிக் கவிதைகள்/ ஆர் வத்ஸலா

  1. காணாமல் போனான் மகன்/
    கொடுத்தார்கள் புகார் அவனுடன் போன கைபேசிக்காக
  2. கருணை ஒதுக்கீட்டில் அரசு பணி கேட்டாள் கைக்குழந்தைக்காரி/
    சுடுகாட்டிலிருந்து திரும்பிய மேலதிகாரியிடம்
  3. பாதம் தூக்கியது குழந்தை/
    ஆகா பரதம் என்றாள் அம்மா
  4. பிண்டம் கொடுத்தார் குயில்களுக்கு/
    பாடகியின் கருமாதியில்
  5. பற்றுவது சேலைகள் மட்டுமே/
    வேட்டிகள் என்றும் பாதுகாப்பாய்
  6. எல்லோரும் சமம் /
    நான் கொஞ்சம் கூடுதலாக
  7. முடி கொடுத்தேன்/
    எடை பார்த்தேன் நம்பிக்கையுடன்
  8. எட்டிப் பார்த்தது /
    ஓவியர் வீட்டினுள் சதுர நிலா.
  9. பொறாமை பட்டது/
    குழந்தை மேல் மடிக்கணினி
  10. கொலுசாகிறது உருளுகையில்/
    உனது நாற்காலியின் சக்கரம்
  11. கைபேசி பார்க்காத காக்கை/
    திடீர் மழையில் சிறகு சிலுப்பியபடி
  12. குயிலின் கச்சேரி/
    காலியானது காக்கை அரங்கம்
  13. இன்றைய கவிதை எழுதிவிட்டேன் எனும் மிதப்பில் நான்/
    நாளை வரும் வரை
  14. யார் சொன்னார்கள்?
    சிறைச்சாலையில் தான் இருக்கிறார்கள் கைதிகள் என
  15. பொய்யே சொல்லாது என் குழந்தை /
    என்பதை விட பெரிய பொய் உண்டோ இவ்வுலகில்?