ஆசாரக்கோவை 27—29/வளவ.துரையன்


பாடல் 27 : உண்டபின்

இழியாமை நன்குமிழ்ந் தெச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து, வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து, முகத்துறுப்
பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்,
மிக்கவர் கண்ட நெறி.

பொருள் :
உண்ட பிறகு வாயில் கொண்ட நீர் உள்ளே போகாதபடி நன்றாக கொப்பளித்து உமிழ்ந்து விட்டு, வாயையும் பாதத்தையும் நன்றாகத் துடைத்து, மூன்றுமுறை தண்ணீர் பருகி (ஆசமனம் செய்து) பிறகு கண், காது, மூக்கு முதலானவைகளை விரல்களால் துடைப்பதே வாய்பூசல் என்ற ஒழுக்கம் மிக்கவர் கண்ட தூய்மை முறை.

பாடல் 28 : பொது நெறி சில
இருகையால் தண்ணீர் பருகார், ஒரு கையால்
கொள்ளார், கொடாஅர் குரவர்க்கு, இருகை
சொரியார் உடம்பும் அடுத்து.

பொருள் :
தண்ணீரை இருகையால் மொண்டும் வாங்கியும் குடிக்கலாகாது. பெரியோர் கொடுப்பதை ஒரு கையால் வாங்குதல் அவருக்கு ஒரு கையால் கொடுப்பதும் கூடாது. (இருகைகளாலுமே பெற வேண்டும், கொடுக்க வேண்டும்.) இருகைகளாலும் உடம்பினைச் சொரியக் கூடாது.

பாடல் 29 : அந்திப்பொழுது செய்வன தவிர்வன

அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண் டடங்கல் வழி.

பொருள் :
மாலைப் பொழுதில் படுத்தலும் நடத்தலும் பயணம் செய்தலும் உண்ணுதலும் ஒருவர்மேல் கோபப்படுதலும் கூடாது. (ஸந்தியாவேளையில் மற்ற காரியங்களைத் தவிர்த்து இறைவழிபாடு செய்தல் சிறப்பு என்பது கருத்து.)
அந்திப்பொழுதில் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். முன்னிரவில் உணவுண்டு ஓரிடத்தில் அடங்கி ஓய்வெடுத்தலும் சிறந்த நெறியாகும்.