ஆசாரக்கோவை 30—32/வளவ. துரையன்

பாடல் 30 : உறங்கும் முறை

கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வந் தொழுது,
வடக்கொடு கோணம் தலைசெய்யார், மீக்கோள்
உடல்கொடுத்துச் சேர்தல் வழி.

பொருள் :
படுக்கும் பொழுது கைகூப்பி இறைவனை வணங்கி, வடக்கு மற்றும் கோணல் திசையில் தலை வைக்காமல், மேற்போர்வை போர்த்திப் படுத்தல் நலம்.

பாடல் 31 : பயணம் செய்யும் பொழுது

இருதேவர் பார்ப்பார் இடைப்போகார்; தும்மினும்
மிக்கார் வழுத்தின் தொழுதெழுக. ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து.

பொருள் :
இரு தெய்வங்களுக்கு நடுவிலும் அந்தணர்கள் நடுவிலும் போதல் கூடாது. யாராவது தும்மிய பொழுதும் பெரியோர் வாழ்த்துகின்ற பொழுதும் வணங்கிக் கொண்டே செல்க. வழிபோகும் பொழுது, சமானமான நண்பர்களுடன் அவர்களுடன் சமமாக (ஒன்றாக) மனமகிழ்ச்சியுடன் செல்க.

பாடல் 32 : அசுத்தம் செய்யத்தகாத இடங்கள்

புல்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆனிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.

புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவ குலம், நிழல், ஆனிலை வெண்பலி என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.

பொருள் :
புல், விளைநிலம், பசுஞ்சாணம், சுடுகாடு, பாதை, நீர்நிலை, கோயில், நிழல் உள்ள இடம், பசுமந்தை நிற்கிற இடம், சாம்பல் ஆகிய பத்து இடத்திலும் எச்சில் உமிழ்தலும் மலஜலம் கழித்தலும் அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.