
நேற்று நடைபயிற்சியின் போது காவிரி ஆற்றில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்தார்.
நான்
“புகைப்படம் எடுக்கிறேன்” என்றேன்.
“இல்லை, உங்களை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கிறது” என்றார்.
“அப்படியா!” என்றேன்.
“நாட்டாம்பாளையம், அத்திகாடு” என்று ஊர்ப் பெயர்களைச் சொன்னார்.
“ஆமாம். முதலில் அங்கே இருந்தோம்”
“யாங்க, நான் நாட்டாம்பாளையம் சின்னான் பையன்”
“அப்படியா? பார்த்து ரொம்ப வருசங்க ஆனதால் தெரியவில்லை.
ஆமாம், இங்கே என்ன செய்கிறீர்கள்?”
“ஷேசாயி பேப்பர் மில்லில் காண்டரக்ட் தொழிலாளியாக டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னைக்கு ஆள் வராததால் இரண்டு ஷிப்ட் பார்த்தேன்”
“இங்கேயே தங்கி உள்ளீர்களா?”
“இல்லீங்க, தினமும் ஊருக்குப் போய் விட்டு வந்திடுவேன்”
“சரி, காலையில் ஆற்றில் இங்கு ஏன் குளிக்கிறீர்கள்?”
“அப்படியே குளித்து விட்டு ஆண்டவனைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாம் என்று” என அருகில் இருந்த கோயிலைக் காட்டினார்.
அப்பா, அம்மா, சகோதரி, எனது பணி பற்றி எல்லாம் விசாரித்தார்.
அதற்கெல்லாம் பதில் அளித்து விட்டு “மகிழ்ச்சி, வருகிறேன்” என்று நடையைத் தொடர்ந்தேன்.
