
இயற்கையின் ஆச்சரியங்களை, வினோதங்களைத்
தன்னுள்ளே அடக்கி
பிரபஞ்சத்தின் பெருவெளியில்
பல யுகத்தினைத் தாங்க வல்ல
காலத்தின் மேல் தனியொரு வாஞ்சை
அதீத நம்பிக்கையில் தடுமாறும் கணங்கள்
அனுபவங்களின் கொள்முதலாக
அகத்தேடலின் உயிர் உருகலில்
தொடரும் நெடும் பயணம்
மானுடத்தின் சாரத்தினைக் கண்டறியத்
தன்முனைப்புடன் தொடர்கிறது
உண்மையைப் போலவே எரியும் பொய்மைகளில்
கருகிப் புகையும் புனைவுகள்
மனதைப் புதைத்து, அறிவிலியாய்
கேள்வியின்றி மௌனத்தில் முக்குளிக்கும் மனிதம்
இவ்வளவுக்கும் நடுவே…
உடைந்த கண்ணாடிக்குள் சிரிக்கும் புத்தர்
ஏனோ… இன்னும் மிச்சமிருக்கிறது
காலத்தின் மீதான வாஞ்சை
