1992ஆம் ஆண்டு எழுதிய கவிதை/அழகியசிங்கர்

     

                          காலையில் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளும்போது எதிர்பாராதவிதமாய் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது.  உடனே என் கவிதைப் புத்தகத்தை எடுத்து அந்தக் கவிதையைப் புரட்டினேன். கவிதையை  1992ஆம் ஆண்டு நான் எழுதியிருக்கிறேன்..

தீர்க்கதரிசனமாக கவிதையை எழுதியிருக்சகிறேனோ என்று இப்போது தோன்றுகிறது. கொரோனாவல் எற்பட்ட இக்கட்டை கவிதை அன்றே வெளிப்படுத்தி விட்டது. ஒரு கவிதை எப்படித் தோன்றுகிறது, எந்தச் சூழ்நிலையில் ஏன் அப்படியெல்லாம் எழுதினோம் என்பதெல்லாம் புரியவில்லை.

    அந்தக் கவிதையை வாசிக்க இங்குத் தருகிறேன்.

யாருடனும் இல்லை

எதைப் பேசுவது
எப்படிப் பேசுவது
ஏன் பேசுவது
எதற்காகப் பேசுவது

பேசினால் அடிப்பார்களா
கேட்டால் உதைப்பார்களா
பார்த்தால் சிரிப்பார்களா

ஏன் பேசுவது
எதைப் பேசுவது
எப்படிப் பேசுவது
எதற்காகப் பேசுவது

பார்க்கப் போகலாமா
பேசுவதைக் கேட்பார்களா
கேட்டதை மனதில் வாங்கி
பதில் அளிப்பார்களா?

எதைப் பேசுவது
எப்படிப் பேசுவது
ஏன் பேசுவது
எதற்காகப் பேசுவது

பேசாமல் ஓடிப் போகலாம்
அதுதான் நியாயம்

எதையாவது பேசு
யாருடனும் இல்லை
உன்னிடம்

எப்படியாவது பேசு
யாருடனும் இல்லை
உன்னிடம்

எதற்காகவாவது பேசு
யாருடனும் இல்லை
உன்னிடம்

ஏன் என்று கேட்காமல் பேசு
யாருடனும் இல்லை
உன்னிடம்