ஏழுவரி”க் கதைகள்/ஸிந்துஜா

மூலம்

இன்று காலை அது நடந்தது .

நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன். அந்தப் பையனும் கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு வருவான். நான் அவனுக்கு எதிரே வரும்போது அவன் நாயிடம் ஆங்கிலத்தில் உத்தரவுகளை இடுவான். ஆங்கிலத்தில் மட்டும்தான். அவன் ஆங்கிலம் குறுகத் தரித்த குறள். கோ, கம், சிட், டோன்ட், ஸ்டாப், ஈட், நான்சன்ஸ், ஜம்ப், ரன், ஷிட், டாமிட் ….என்று. ஓரக் கண்ணால் நான் கவனிக்கிறேனா என்று பார்த்துக் கொள்வான்.

ஒரு நாள் யாரோ சிவனாண்டி என்று கூப்பிட்டார்கள். அவன் திரும்பிப் பார்த்துக் கூப்பிட்டவரைப் பார்த்து, ‘வணக்கமண்ணே .நல்லா இருக்கீங்களா,’ என்று கேட்டான். நான் அவர்களைக் கடந்து சென்றேன். அவரும் நகர்ந்து போய்க்கொண்டிருந்தார். அவன் வழக்கம் போல நாயிடம் ‘கோ,கோ’ என்று சங்கிலியை இறுக்கினான் .

இன்று அது நடந்தது .

நான் அவனைக் கடந்து சென்ற மறு நிமிடம் ‘ஐயோ அம்மா! ஐயோ! ஐயோ!’ என்று கூக்குரல் கேட்டது . திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். சிவனாண்டியின் கை நாயின் வாய்க்குள் இருந்தது. நானும் மற்றும் சிலரும் அவனை நோக்கி ஓடினோம். நாய் அவன் கையை விட்டு விடாமல் அவனை இழுத்துக்கொண்டு போனது. “அம்மா, யாராவது காப்பாத்துங்களேன். ஐயோ, வலி உயிர் போகுதே ” என்று அவன் கதறினான். யாரோ ஒருவர் கையால் இருந்த தடியை நாயை நோக்கி வீசினார். அது கலவரப்பட்டு சிவனாண்டியின் கையை விட்டு விட்டு ஓடியது. ‘ஐயோ அம்மா! ஐயோ அம்மா!’ என்ற சிவனாண்டியின் கதறல் நிற்கவில்லை .

சிவனாண்டியின் கையிலிருந்து ரத்தமும், வாயிலிருந்து தமிழும் ஒழுகிக் கொண்டிருந்தன .