
வாசலில் யாரோ மாவிலை பறிக்க
அனுமதி கேட்கிறார்கள்;
அனுமதிக்க முடியாது என்று
என் கணவர் மறுக்கிறார்;
இருவர் பேச்சும் முன் அறையில்
இருக்கும் என் காதில் விழுகிறது;
இன்று நேற்றா
ஆதியிலிருந்தே இவர் இப்படித்தான்;
கொஞ்சம் மாவிலை பறித்தால்
இவரின் சொத்தா குறைந்துவிடும்., எச்சிற் கையால்
காக்கா விரட்ட மாட்டார்,
அவ்வளவு பரந்த மனசு;
ஜன்னல் வழியே
எட்டிப் பார்க்கிறேன்;
ஓ, இந்தப் பெண்ணா!
இவளை முன்பே நானறிவேன்;
சற்றே தள்ளி இவர்கள்
சின்னதாகப் புது வீடு
கட்டியிருக்கிறார்கள்,
நாளை கிருஹப்பிரவேசம்;
ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை
என்பதுபோல்
அளவாகவே அவர்கள்
கிருஹப்பிரவேசத்திற்கு
நெருங்கியவர்களை மட்டும்
அழைத்திருப்பார்கள்;
அண்டை அயலில்
எங்கள் வீடு தவிர
வேறு எங்கும் மாமரம் இல்லை;
பாவம், எங்கே போவார்கள்?
சற்றே பொறுக்கலாம் என்று
அமைதியாகிறேன்;
மதிய உணவு உண்டு முடித்து
இவர் உறங்கப் போய்விட்டார்;
இப்போதைக்கு
எழுந்திருக்க மாட்டார்;
முற்றத்திற்கு வந்து
பதினொரு மாவிலைகளைப்
பறித்துக்கொள்கிறேன்;
கயிற்றில் கோத்துத்
தோரணமாகச் செய்துமுடிக்கிறேன்;
பைக்குள் வைத்துக்கொண்டு
புதுவீடு நோக்கி
நடந்து வருகிறேன்;
நல்ல வேளை,
அந்தப் பெண் தன்
வாசலில் நிற்கிறாள்,
மாவிலைத் தோரணத்தைக்
கையில் கொடுத்து
விவரம் சொல்கிறேன்;
முகமலர்ந்து அவள்
என் கையைப்
பற்றிக்கொள்கிறாள்;
கிருஹப்பிரவேசத்திற்கு
வருமாறு அழைக்கிறாள்;
இன்னொரு நாள் வருவேன்
என்று உறுதி சொல்கிறேன்;
திரும்பி
என் வீடு நோக்கி
நடந்து செல்கிறேன்;
சில்லெனும் பூங்காற்று
மெல்ல என் முகத்தை
வருடிச் செல்கிறது.
