ஆறு கவிதைகள்/அழகியசிங்கர்

( வெள்ளிக்கிழமை (26.05.2023) அன்று நவீன விருட்சம் நிகழ்வில் தலைப்புக்கு வாசித்த 6 கவிதைகள்.)

  1. மெட்ரோ ஸ்டேஷன்

மெட்ரோ ஸ்டேஷனில்
காலையிலிருந்து
இரவு வரை காத்திருந்தேன்

அவள் வரவில்லை
அவள் வரவே இல்லை

  1. பூனை

பூனை கர்ணகடுரமாய்
கத்தியது
‘மியாவ்..மியாவ்..’
என்று.
பக்கத்திலிருந்த
இன்னொரு பூனை
உர்ர் ரென்று துரத்தியது

நான் கீழே போய் விரட்டினேன்

  1. கண்ணாடி

கண்ணாடி முன்
நின்றேன்
நான்…நான்..

ஆனால் நான் மாதிரி
தெரியவில்லை

சிறிது நேரம் கழித்து
திரும்பவும் ஆடியில்
முகம் பார்த்தேன்

இப்போது நான் மட்டும்தான்
தெரிந்தேன்

  1. தெரு

எங்கள் வீடு இருக்கும்
தெருவில்
எல்லாம் உண்டு

ஒர் அழகான செடி
மஞ்சள் நிறப் பூக்களை
சுமந்து நின்றது
கொள்ளை அழகு

யாரோ
உடனடியாகப்
பூக்களைப் பறித்துக்கொண்டு போய் விடுகிறார்கள்

  1. வாழ்க..வாழ்க..

உங்களைப் பார்க்கிறேன்
வாழ்க வாழ்க என்கிறேன்

நீங்களும் ம்ம் என்கிறீர்

திரும்பவும் உங்களைப்
பார்த்து
வாழ்க வாழ்க என்கிறேன்

இப்போது
முகத்தைச் சுளித்துக்கொண்டு

நீங்கள் ஓட்டமாய்
ஓடிக் கொண்டிருக்கிறீர்
என் பார்வையில் படாமல்

  1. மின்னல்

வானத்தில் மின்னல்
ஒரு வைர ஊசி
மின்னல்
ஒரு நிமிடம்
கண்ணை மூடித்
திறப்பதற்குள்
மறைந்து போய் விடுகிறது

ஐயோ மின்னல்