
தோழியும் …நானும் இன்று …கனகாம்பரப்பூ நிறத்தில் ஆடை…சொல்லிவைத்தார்போல்.
நட்டுவைத்த ரோஜாச்செடி துளிர்த்துவிட்டது என்நம்பிக்கை பொய்த்துவிடாமல்.
அம்மா சமைத்ததெல்லாம் எனக்குப்பிடித்ததாய் அமைந்தது
தற்செயல்தான்.
நானே போட்டுக்கொண்ட மெகந்தியின் சிவப்பு….அனைவரையும் விசாரிக்கவைக்கிறது.
சின்ன சின்னத் தருணங்களில்
மனக்குளத்தை நிரப்பிக்கொண்டிருந்தேன்…
மகிழ்ச்சியில்.
காதலென்று கல்லெறிந்தாய்….
உள்வட்ட அலைகளெல்லாம்
உன்னைச் சுற்றிச் சுற்றியே.
இப்போது தருணங்கள் எதுவந்தாலும்….தனிமைதான்
பிடிக்கிறது.
ரோஜாச்செடி வாடிக்கிடக்கிறது…நீர் ஊற்றாமல்.
