க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார்/கார்த்திக்குமார்

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமாரின் மகன் கார்த்திக்குமார்: அப்போது எனக்கு வயது 4 இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அழகாக நினைவு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அப்பா என்னை சைக்கிளில் ப்ரன்ட் பாரில் உட்கார வைத்து கோயிலுக்கு ஒட்டிக்கொண்டு செல்வார். கோயிலில் திரும்பி வரும்போது ஏதாவது திண்பண்டம் அல்லது பட்டம் செய்யும் கலர் காகிதங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதால் அந்த சிறுதூர பயணம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏதும் கிடைக்காவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு ரைடு கிடைத்தது என்று சந்தோஷப் பட்டுக்கொள்வேன்.

நாங்கள் கோவையில் குடியிருந்த பகுதி உறவினர்களாலும் அவரின் நெருங்கிய நண்பர்களாலும் சூழப்பட்ட இடம். அங்கு அவர் (அப்பா) ராஜேஷ்குமார் இல்லை… கோபால் அல்லது ராஜகோபால். அப்பா படித்த மற்றும் ஆசிரியர் வேலையில் இருந்த பள்ளியில்தான் நானும் படித்தேன். அதனால் அங்கேயும் அவர் ராஜகோபால் என்றுதான் அறியப்பட்டார். அதேபோல் பள்ளி படித்த காலத்தில் என் உலகம் மிகவும் சிறியது. வீடு, பள்ளி, நான் பயணித்த தெரு.. அவ்வளவுதான். அதனால் அப்பா எப்படி ராஜகோபால் என‌‌ அறியப்பட்டாரோ அதே பிம்பம்தான் இருந்தது.

காலம் செல்ல செல்ல… என்‌ பதின்ம வயதுகளிலிருந்து வெளிவரும்போது ராஜேஷ்குமார் என்ற பெயர் எனக்கும் மிகவும் பரிச்சயமாக மாறியது.

காரணம் இரண்டு.

ஒன்று… போஸ்ட்மேன் தினமும் இருவேளைகளும் பைகள் நிறைய கடிதங்கள் மற்றும் புத்தகங்களைக் கொண்டு வருவார். நேரம் இருப்பின் அப்பாவுக்கு, தம்பியும் நானும் அவற்றையெல்லாம் பிரித்து கொடுப்போம்.

இரண்டாவது… வீட்டிற்கு தினந்தோறும் நிறைய வாசகர்கள், பத்திரிகையாளர்கள் என வந்துக்கொண்டே இருந்தார்கள்.

நாங்கள் வார நாட்களில் பள்ளி முடிந்து வந்தால்… அழைப்பு மணி ஒலித்துக்கொண்டே இருக்கும். கதவை திறந்து அவர்களுடன் உரையாடுவது நானும் தம்பியும்தான். வார இறுதியில் இது மிகவும் அதிகமாக இருக்கும்.

அப்பா ரொம்ப பிஸியாக இருக்ககூடிய நேரங்களில் வரும் வாசகர்களை பத்திரிகையாளர்களை சில நேரங்களில் சந்திக்க இயலாமல் போகும். அந்த நேரங்களில் அவர்களிடம் , நீங்கள் இன்னொரு நாள் வாருங்கள் என்று அவர்களிடம் சொல்வதற்கு எனக்கு சங்கடமாக இருக்கும். என்ன சொல்வதென்றே தெரியாது. மிகவும் கடினமான வேலை அது. ஒருகட்டத்தில் தம்பியும் நானும்… காலிங் பெல் அடித்தாலே, கதவை நீ திற, நான் திற என சண்டை போட்டு, அதற்கு அம்மாவிடம் அடியும் விழுந்திருக்கிறது.

அவரோட வேலை முழுக்க, உடல் சார்ந்து இல்லாமல் மூளை சார்ந்தது என்பதால்… உடற்பயிற்சிக்காக எங்களோடு தினமும் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடுவார்.

அப்போது அப்பா, விளையாடுவது சிறுவர்கள் என்ற பாரபட்சமின்றி விளையாட்டில் பட்டையை கிளப்புவார். நாங்களும் சளைக்காமல் பந்து வீசுவதில் இருந்து அடித்து விளாசுவது வரை சக தோழனாக அப்பாவோடு மல்லுக்கட்டுவோம். இந்த கிரிக்கெட்தான் எங்களை மிகவும் இறுக்கமாக பிணைத்தது. அப்பாவை நண்பனாக எங்களுக்கு காட்டியது.

அப்பாவை நினைத்தால் எப்பொழுதும் பெருமிதம் தான். மிகவும் சின்ன வீட்டில்தான் தன் கேரியரை அவர் தொடங்கினார். அந்த வீட்டில் இருந்தா? இவ்வளவு கதைகளையும் எழுதினார் அப்பா என்று நினைத்துப் பார்க்கும்போது இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்துலகில் எழுதுவதற்கு சுகமான சூழல்கள், சில கெட்ட பழக்கங்கள், ஏகாந்தமான இடங்கள், மனநிலை வேண்டும் என்று‌ பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன். ஆனால், 10க்கு 10 அடி பிஸியான சமையலறையில் மேஜை நாற்காலி போட்டு கதைகளை எழுதியது எல்லாம் ஜென் நிலை அடைந்தால் தான் சாத்தியம். அது அப்பாவுக்கு கைப்பெற்றிருந்தது.

அப்பா இதுவரை, தான் எழுதிய எந்தக் கதைகளையும் படியுங்கள் என்று எங்களைச் சொன்னதே இல்லை. எப்போதும் மிகவும் நார்மலாக பேலன்ஸ்ட் ஆக இருப்பார். பொருளாதாரப் பிர்ச்சினைகள் மற்றும் எழுத்துப்பணிகளில் பளு இருந்தாலும் அந்தக் கஷ்டங்களை எங்களிடம் ஒருநாளும் காட்டிக்கொண்டது இல்லை. அதிலும் அந்தநேரத்தில் அப்பா 4, 5 பத்திரிகைகளுக்கு தொடர்ந்து தொடர் எழுதிக் கொண்டிருந்தார். எப்படித்தான் அவர் அந்த காலகட்டங்களையெல்லாம் மேனேஜ் பண்ணினார் என்று நினைக்கும் போதிலிருந்து, அவர் நேரத்திற்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் எந்தளவு என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

நேரத்தை மிகச் சரியாக கடைபிடிப்பதில் அப்பாவை மிஞ்ச முடியாது. வீட்டில் எப்போதும் அவர், அவருக்கே அவருக்கான ஒரு இடத்தில் இருந்து யோசித்துக்கொண்டே அவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். செய்யும் செயல்களில் எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். சிறு‌காகிதத்தைக் கூட வீணாக்க மாட்டார்.

அப்பாவின் உலகமே எப்போதும் தனி தான். அப்பாவுக்கு எந்தக் கெட்டப் பழக்கங்களும் கிடையாது. சிடுசிடுவென இருந்து நாங்கள் அவரைப் பார்த்ததே இல்லை. எந்தவொரு பிரச்சினை வந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவார். நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உள்ள மனிதர். இது எல்லாமே அப்பாவின் ப்ளஸ்.

அவ்வப்போது ஹோட்டலுக்கு சாப்பிட செல்வோம். அந்தநேரத்தில் அப்பா, தான் எழுதும் கதையைப் பற்றி பகிர்ந்துகொள்வார். “கதை இதுதான், இதுக்கு டைட்டில் என்ன வைக்கலாம்?” என்று கேட்பார். நீங்க சொல்லிவிட்டால் ஐஸ் கிரீம் வாங்கித் தருகிறேன் என்பார். உடனே நாங்க எப்படி சொல்ல… அதனால் கன்னா பின்னாவென்று யோசித்து பார்த்துக் கொண்டிருப்போம். டைட்டில் அப்பா யோசித்ததுபோல சொல்ல வேண்டும் என்பதற்காக எவ்வளவு மெனக்கெட்டாலும் கிட்டத்தட்ட, என்று சொல்கிற அளவில்கூட பக்கத்தில் வந்ததில்லை எங்களது தலைப்புகள். ஆனாலும் அப்படி முயற்சி செய்வோம். தலைப்பு தப்பா சொன்னாலும், ஐஸ் கிரீம் கிடைத்துவிடும்.

நாம் ஒரு இடத்துக்கு வற்புறுத்தி அழைக்கும்போது, அதனை ஒத்திப்போடுவதற்காகவே ஒரு அருமையான ஐடியா வைத்திருப்பார் அப்பா. என்ன அந்த ஐடியான்னா… என்னை அசத்தற மாதிரி ஒரு தலைப்பு சொன்னா கட்டாயம் போகலாம்; ஆனா, அந்த தலைப்பு அவரை அசத்துமா அப்படின்றது மிகப் பெரிய கேள்விக்குறி.

வருடங்கள் செல்லச் செல்ல அப்பாவைப் பற்றி‌ பல விஷயங்கள் முழுமையாக புரிந்தது. இப்போது அப்பாதான் எனக்கு முதன்மையான ரோல்மாடல் என்கிறார் கார்த்திக்.

நன்றி: இந்து தமிழ் திசை

முகநூலில் பதிவு செய்தவர் : ஆர்.கந்தசாமி