சாருநிவேதிதா பதிவு

பெங்களூர் சென்று வந்தேன். திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன். பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பஸ்ஸில் பயணம் செய்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பஸ் பயணமே எனக்கு ஒத்து வருவதில்லை. இந்தியாவில் பஸ்களில் கழிப்பறை வசதி இல்லாததால் என்னால் பஸ்ஸில் செல்ல முடிவதில்லை. அந்தப் பிரச்சினை இரவில் மட்டும்தான். பகலில் நானும் மற்றவர்கள் மாதிரிதான். பகலில் என் சிறுநீரகம் சரியாக வேலை செய்யும். ஆனால் ஒரு முழுப் பகலையும் பஸ் பயணத்துக்கு ஒதுக்க முடியாது என்பதால் பகலில் பஸ்ஸில் பயணம் செய்வதில்லை.

பெங்களூர் விஷயத்தில் இந்தப் பயணத்தில்தான் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். புதன்கிழமை பெங்களூரிலிருந்து திரும்ப முடியாது. வந்தே மாதரம் – ஸாரி, வந்தே பாரத் – புதன்கிழமை கிடையாது. சதாப்தியும் புதன்கிழமை அன்று மாலையில் கிடையாது. மற்றபடி கிடைக்கும் நீண்ட தூரத்திலிருந்து வரும் ரயில்களில் பயணம் செய்யாதீர்கள் என்று பயண முகவர் சொன்னார். அதன் பொருள் அவருக்கே தெரியும். என்ன பிரச்சினை என்று நான் கேட்கவில்லை. பொதுவாக அது போன்ற விஷயங்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. கிடையாதா, கிடையாது. ஏன் கிடையாது என்ற பேச்சே எடுப்பதில்லை. விமானத்தில் திரும்பி விடலாம் என்று பார்த்தால் புதன்கிழமை மட்டும் டிக்கட் 12000 ரூ. மற்ற நாட்களில் 3000 தான். இது என்னடா கஷ்டகாலம் என்றுதான் பஸ்ஸில் டிக்கட் போடச் சொன்னேன். சீனிதான் போட்டார். இதை எழுதியதும் எல்லா நண்பர்களும் அவரை ஒரு பயண முகவரைப் போல் மாற்ற சாத்தியமுண்டு. சீனி எனக்கு மட்டும்தான் இதெல்லாம் செய்வார். ஏன் என்று பலமுறை எழுதி விட்டேன். மறந்து போயிருந்தால் அவரையே கேட்டுக் கொள்ளுங்கள்.

பஸ் என்றால் எப்படி இருக்கும் என்ற என் எதிர்பார்ப்பும் பொய்த்து விட்டது. தனியாக காலை நீட்டிப் படுத்துக் கொள்ளலாம். பக்கத்தில் எந்த ஆத்மாவும் இல்லை. இரண்டு முறை நிறுத்துகிறார்கள்.

படு வசதியான பயணம். ஆனாலும் இனிமேல் ஒருமுறை கூட பஸ்ஸில் பயணம் செய்யக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன். புதன்கிழமை கிளம்ப வேண்டியிருந்தால் அதை ரத்து செய்து விட்டு புதன்கிழமையும் பெங்களூரிலேயே தங்கி விட்டு வியாழன்தான் கிளம்ப வேண்டும். இப்போதும் அப்படியே செய்திருக்கலாம். ஆனால் பெட்டியோ வேலை என்னை இழுத்துக் கொண்டே இருந்தது. பெங்களூரிலேயே செய்திருக்கலாம். ஆனால் அவ்வளவு ’அழகான’ ஊரில் அமர்ந்து கொண்டு என்னால் எழுத முடியவில்லை. ஏனென்று, இந்தக் கட்டுரை முடிவதற்குள் உங்களுக்குத் தெரிந்து விடும்.

பஸ்ஸே வேண்டாம் என்ற முடிவுக்குக் காரணங்கள்: பன்னிரண்டரைக்கு வர வேண்டிய பஸ் ஒரு மணிக்குத்தான் வந்தது. இது அராஜகம். போய்ச் சேரும்போது தாமதம் நேரலாம். கிளம்பும்போதே என்றால் கொடுமை. நல்லவேளையாக, அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த என்னுடைய ஒரு வாசகர் என்னைக் கண்டு திடுக்கிட்டு நின்றவர் பஸ் வரும் வரை என்னோடு நின்று பேசிக் கொண்டிருந்தார். அவர் மட்டும் வந்திருக்காவிட்டால் மடிவாலா என்ற அந்த இடத்தின் நடு ரோட்டில் நிற்க முடியாமல் புதன்கிழமையும் அங்கேயே தங்கி விட்டு வியாழக்கிழமை விமானத்தைப் பிடித்துத்தான் வந்திருப்பேன். அந்த நடு ரோட்டில் உட்காருவதற்குக் கூட வசதி இல்லை. ஆனால் பஸ் நிறுவனமான ஏஷியன் எக்ஸ்பிரஸ்காரர்கள் 12.35க்கே எனக்கு ஃபோன் செய்து பஸ் வந்து கொண்டிருக்கிறது, கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்தார்கள். அதுதான் கஸ்டமர் சர்விஸாம்! ஆனால் 12.55 வரை பஸ் வராததால் நான் ஃபோன் செய்து கேட்ட போது, எல்லோருக்கும் சம்பளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சார், அதுதான் லேட், ஹிஹி என்றார் ஃபோனில் பேசியவர்.

ஒரு மணிக்குக் கிளம்பிய பஸ் இரவு ஒன்பதரைக்குக் கோயம்பேடு வந்தது. என்னதான் பஸ் பயணம் சொகுசாகவே இருந்தாலும் இத்தனை மணி நேரம் பயணம் செய்வதெல்லாம் என்னால் இயலாது என்பதால் இனிமேல் பஸ் பயணமே கிடையாது என்று முடிவு செய்து விட்டேன். ஒன்று, விமானம். இல்லையேல், ரயில். ரயில் என்றால் படிக்கவாவது செய்யலாம். இந்தியாவில் சாலைகள் சரியில்லாததால் படிக்கவும் முடியவில்லை.

முகநூலில் : ஆர். கந்தசாமி