நேற்றென்பது இன்றில்லை/ரத்னாவெங்கட்


ஒரு மழைப் பகலின்
மீள்பாதி
வனாந்திரத்தின் இருண்மை
சற்றே களைய
நெகிழ்ந்த கிளைகளினூடே
மண் கிளர்த்தி முத்தமிட்டு
உயிரின் ரகசியத்தை
விதைத்து நகர்ந்தது ஒளி

புகும் கிரணத்தை உள்வாங்கி
சலசலத்து விடுபட்ட இலை
எடுத்துக் கொண்டது
சில நொடி மனிதக் கணக்கில்
கல்ப கணங்கள் அதன் மிதத்தலில்
இறங்குகிற வரை
தொட்டு உயர்த்தவேயில்லை காற்று

நகரும் நிழலைத்
துரத்திக் களைத்த பட்டாம்பூச்சி
அந்திமத்தின் சாயல் படிந்த
மென்னொளியில்
உதிர்ந்த மலரை முத்தமிட்டு
எப்போதும் ஜெயிப்பதென்னவோ
காலம்தானென
அசைவற்றிருந்தது …