மரப்பாச்சி/புவனா சந்திரசேகரன்

1.மரபாச்சி பொம்மை கண்ணில் பட்டது!

மலரும் நினைவுகள் மனதில் நிறைந்தன!

அம்மாவுடன் சேர்ந்து அடுக்கிய பொம்மைகள்

ஓய்வெடுக்கின்றன பரணில் இன்று!

2.காலுடைந்த மரப்பாச்சியைக் கையில் எடுத்தாள்!

சப்பாத்தி மாவை ஒட்டித் துணியைச் சுற்றினாள்!

மரப்பாச்சிக்கு செயற்கைக் கால் கிடைத்தது!

சிறுமிக்கு இன்னும் கிடைக்கவில்லை!

3.கொலுப் படிகளில் மரப்பாச்சி பிரதானம்!

ஜோடியுடன் நிற்பதால் பெருமிதம் பிரமாதம்!

ஜோடியை இழந்து தவிக்கிற உயிரொன்று

ஒதுங்கி நிற்கிறது கண்ணீருடன்!

4.கொலுப் படிகளில் பொம்மைகளின் ஆரவாரம்!

வண்ண வண்ண பொம்மைகள் படிகளில்

வருடம் தோறும் வந்தாலும் போனாலும்

மரப்பாச்சி மட்டும் மாறுவதில்லை!