
பூ.சுப்ரமணியன்
**
மலர் மெத்தையில் பலர் புரள
மண்தரையில் சுகம் இழந்து
நாளும் துன்பத்தில் வீழ்ந்து
துவளும் குடும்பங்கள் இங்கே!
பகட்டான பட்டாடை அணிந்து
அறுசுவை உண்டு மகிழ்ந்து
ஒருசுவையும் அறியாத மக்கள்
தெருவில் திரிவதும் இங்கே!
துடிப்புள்ள ஏழைச் சிறுவர் சிறுமிகள்
படிக்க பள்ளிக்குச் செல்லாமல்
நாளும் வெடிமருந்தில் கலந்து
வாழ்வை தொலைப்பது இங்கே!
அனைத்தும் அறிந்த மக்களே
ஆர்ப்பாட்டமின்றி விழிப்புணர்வோடு
அன்போடு சிறுவர் சிறுமியர்
பள்ளி செல்ல துணைபுரிவோம்!
பட்டாசில்லா தீபாவளி
குடிசை வாழ் மக்களோடு கலந்து
கட்டுப்பாட்டோடு கொண்டாடி
தீப ஒளியில் நாமும் மகிழ்வோம்!
