மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி/ஷாகூல் ஹமீத்

Shahul hameed

மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி, 103 வயது வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா,

இனி… நினைவில் மட்டும்….

மன்னர் ஆட்சிக் காலத்தில், மன்னர் உட்பட பிரமுகர்கள் வரும்போதும், கோவில்களில் மூர்த்திகள் ஊர்வலம் வரும்போதும், வரவேற்பு கொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் என்று ஆண்டைகள் கருதும் பிரிவைச் சேர்ந்த இளம் பெண்கள், இரண்டு பக்கங்களிலும் நிற்க வேண்டும்… இந்தப் பெண்களின் கைகளில்,
மலர் இதழ்கள் கொண்ட, தட்டுகள் இருக்கும்… ஆண்டைகளும், கோவில் மூர்த்திகளும் ஊர்வலமாக வரும் போது, இந்த இளம்பெண்கள், தங்களது கைகளில் இருக்கும்
தட்டுகளிலிருந்து, மலர் இதழ்களை, அவர்கள் காலடிகளில் தூவ வேண்டும் என்பது சட்டம்..
இதை மலையாளத்தில் தாலப்பொலி என்று கூறுவார்கள்..

இதைப் படிக்கும்போது, சாதாரணமாக உங்களுக்குத் தெரிந்தாலும், இங்கே மிகவும்
முக்கியமான செய்தி என்ன வென்றால், பெண்கள் அனைவரும், தங்களது மார்புகளை
மறைக்காமல், திறந்த மார்போடு நின்றுதான், ஆண்டைகளுக்குப் பூக்கள் தூவி வரவேற்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது..
இது தான் அப்போதைய ஆச்சாரம்… மரபு.. வழக்கம், சட்டம் எல்லாம்…

இப்போது கூட, நமது ஊர்களில், அமைச்சர் பெருமக்களோ, தலைவர்களோ வரும்போது,
பள்ளி/கல்லூரி மாணவிகளை வெயிலிலும், மழையிலும் கால் கடுக்க நிற்க வைக்கும் அவலத்தைக் காண முடியும்… ஆனால், இது போன்ற நிலப்பிரபுத்துவக் கூறுகளின் எச்சங்களை நாம் கூட அனுமதித்து வருகிறோம் என்பது தான் விசித்திரம்..

இப்படித்தான்….
1952 ஆம் ஆண்டு, இன்றைய கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டம், வேலூர் என்ற கிராமத்தில்,
மணிமலர் காவு என்ற கோவிலில், கும்ப பரணி திருவிழா, கோலாகலமாக நடந்தது. அப்போதைய கொச்சி சமஸ்தானத்தின் ஒரு
பகுதியாக இருந்த, இப்போதைய திருச்சூர் மாவட்டம், சேங்ஙழிநாடு என்ற சிறு பகுதி ஆண்டையின், ஆட்சியின் கீழ் இருந்த, மேலே குறிப்பிட்ட கோவில் திருவிழாவில், இளம் பெண்கள், தாலப்பொலி எடுத்து மலர் தூவி
அனைவரையும் வரவேற்க வேண்டும் என்பது ஆண்டையின் உத்தரவு…
ஆண்டைகளின் உத்தரவுகள் மீறப்பட்டால், அங்கேயே, அதே இடத்தில் மரணம் நிச்சயம் என்பது தான் ராஜ நீதி. இதை எவரும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது…

ஆனால், தாலப்பொலி ஏந்த வேண்டிய இளம் பெண்கள் தாலப்பொலிக்கு வர வேண்டிய நேரம் வரை அங்கு வந்து சேரவில்லை.
மார்பை மறைக்காமல் வரும் நூற்றுக் கணக்கான பெண்களைக் கண்டு ரசிக்கக் கூட்டம் கூட்டமாக வந்து நின்ற, மேல் சாதிக் கயவன்கள் தங்களது இச்சை நிறைவேறாத கோபத்தில் துள்ளிக் குதித்துக் கொந்தளித்தனர்.

ஆண்டை, கோபத்தில் தனது பெரிய மீசையை முறுக்கிக் கொண்டே தவிப்போடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். ஆண்டாண்டு காலமாக, நடந்து வரும் ஆச்சாரம், தாமதமாகும் ஏமாற்றம் அவருக்கு..

இறுதியாக….
எதிர் பார்த்த, நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், நீண்ட முந்தானையோடு, தங்களது
மார்பை மறைக்கும் ரவிக்கையையும் அணிந்து கொண்டு, கம்பீரமாக வந்து வரிசையில் நின்றனர். இந்தப் பெண்களின் வரிசையில் முதல் பெண்ணாக, வேலத்து லட்சுமிக் குட்டி என்ற சிங்கக் குட்டி, சகாவு, வேலத்து லட்சுமிக்குட்டி….

ஆமாம்..
ஆண்டைகள் தேர்வு செய்த பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்குத் தைரியமூட்டி, ரவிக்கை அணிந்து, சேலை கட்டச்
சொல்லி, தானும் ரவிக்கையும், சேலையும் அணிந்துகொண்டார், லட்சுமிக்குட்டி அம்மா!
பிறகென்ன..
மணிமலர் காவு கோவில் வளாகத்தில், அந்த சிங்கக் குட்டி களின் ஆவேசத்தை லட்சுமிக்குட்டி அம்மாவின் தலைமையில்,
தீப்பந்தம் போன்று கனன்று கொண்டிருந்த அந்த இளம் கதிர்களின் வெப்பத்தை
ஆண்டைகள் புரிந்து கொண்டார்கள்…

அங்கே குழுமியிருந்த மேல் சாதிக் கயவன்கள், பெண்களின்
மறைக்காத மார்புகளைக் காண வந்து எதுவும் நடக்காமல் போக, பின்னங்கால் பிடரியில் படத் தப்பித்து ஓடியதை, மணிமலர் காவு பகவதி அம்மன் கண்கள் குளிரக் கண்டு களித்தார்.

நூற்றாண்டுகளாக, அங்கே நிலவி வந்த, கொடிய சட்டத்தைத் தனது கால்களின் கீழ் போட்டு மிதித்துப் பெண்களின் சுயமரியாதையை
மீட்டெடுத்த சகாவு வேலத்து லட்சுமிக் குட்டி அம்மா, தனது 103வது வயதில் நேற்று காலமானார்….

ஒரு நூற்றாண்டுப் பெருவாழ்வு, நேற்று முடிவுக்கு வந்தது…

பெண்கள் இல்லாமல் வரலாறும் இல்லை; சமூக மாற்றமும் இல்லை; ஜனநாயகமும் இல்லை; சமத்துவமும் இல்லை…

லால்சலாம்..

ലാൽസലാം

2 Comments on “மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி/ஷாகூல் ஹமீத்”

Comments are closed.