கம்பனைக் காண்போம்—7

வளவ. துரையன்

                     

                       சிவனும் திருமாலும்

                 நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்    
     ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
     சேறு   அணிந்த முலைத் திருமங்கைதன்
     வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே        [14]
                        [ஆர்கலி=கடல்; வீறு=மேன்மை]

இந்தப் பாடலில் சைவ வைணவ ஒற்றுமையைக் காட்ட சிவன், திருமால் என்னும் இரண்டு கடவுளரையும் கம்பன் உவமைக்குப் பயன்படுத்துகிறான். மழை வரப் போகிறது. சிவன் பூசிக்கொண்டிருக்கும் திருநீறு போல வெண்மை நிறம் உடைய மேகங்கள் தாம் செல்லும் வழியை அழகுபடுத்திக்கொண்டே செல்கின்றன. அவை ஒலிக்கின்ற கடலின் நீரைக் குடிக்கின்றன. பிறகு திருமாலின் திருமேனி போலக் கருமை நிறம் கொள்கின்றனவாம். கார்மேனி என்று திருப்பாவையில் திருமால் குறிப்பிடப்படுவார். வைணவ மரபில் திருமாலைச் சொல்லும்போது பிராட்டியையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். திருமால் தம் மேன்மைக்கு அணியாக அகில் குழம்பைத் தம் மார்பில் பூசிக்கொண்டிருக்கும் திருமகளை அணிந்துள்ளார் என்று கம்பன் காட்டுகிறான்.