சுதந்திரம் /ரத்னாவெங்கட்

நீர் நிரம்பிய குடுவையை
வெட்டவெளியில்
இரவு முழுவதும்
திறந்து வைத்திருந்தேன்
இரவின் இருளைப்
பிரதிபலித்ததே தவிர
நிலவின் கதிர்கள் கூட
அதைத் தொடவில்லை….
இயலாமையின் கடைசி
நிமிடத்து முடிவாய்
சட்டெனத் தண்ணீரை
குளத்தினில் விடுத்து
கரையோரம் ஒதுங்கி அமர்ந்தேன்…
விருப்பப்பட்டோ…. இல்லையோ
மிதந்து கொண்டிருந்தது
வெண்ணிலவு