சுதந்தர நாள்/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

சுதந்தர தினத்தைக் கொண்டாடு
சுதந்தர உணர்வை நீ பாடு
இதம் தரும் நாளின் மகத்துவமே
இந்தியர் இதயம் உணர்ந்திடுமே

ஆங்கில ஆட்சி ஆதிக்கமே
தாங்கித் தந்தது நாட்டுணர்வே
பொங்கிப் பெருகிய வீரத்திலே
ஓங்கி எழுந்தது சுதந்தரமே

அடிமேல் அடியாய் விழுந்தாலும்
அடிமைத் தளைகள்
தொடர்ந்தாலும்-காந்தி
அடிகள் வழியில் அந்நியரை
அடியோடு விரட்டிய நாளன்றோ

அஞ்சாத் திலகர் கோகலேயும்
அவரொடு இணைந்த ஜவஹருமே
துஞ்சாப் பணியை
நிறைவேற்றி
தூயநன்னாளைத் தந்தனரே

மாநிலம் எல்லாம் ஒரு குடையில்
மாசிலா நிலையைப் பெறுதற்கு
ஓடி உழைத்த பட்டேலின்
ஒற்றுமை காட்டும் நாளன்றோ

பெண்கள் விடுதலை இயக்கத்திலே
கண்மணியானவர் பாரதியே
மண் விசைக் காற்று உள்ளவரை
பண் இசையோடு மதிப்பாயே

கொடியை ஏற்றி மடித்தபின்னர்
கொள்கைப் பிடிப்பு மடியாமல்
-ஒவ்வொரு
நொடியும் நாட்டை நினைத்திடுவாய்
நிம்மதி சூழ நிலைத்திடுவாய்.

One Comment on “சுதந்தர நாள்/இலத்தூர் கி.சங்கரநாராயணன்”

Comments are closed.