இலையும் மரமும் (2)/ஹரணி

கவிதை ஒன்று வெளிப்பாடு வேறு வேறு

000

இலை உதிர்கிறது
மரம் உதிர்க்கிறது
வாழ்க்கை தொடர்கிறது.

000

இலையின் மரணம் சருகு
மரத்தின் மானம் இலை
மானம் இழக்காமல் மரம்

000

துளிரில் துடிக்கும் மரம்
சருகிவ் மெளனிக்கும் மரம்
யுகங்களில் வாழும் மரம்

000

நிழலென்பது மரமல்ல இலையே
இலையை நிழலாக்குவது மரமே
இலையும் மரமும் நிழலே.

000

மரங்கள் நிறைந்தது காடாகும்
மரமே எண்ணிக்கை இலையல்ல
இலைதான் சிலரின் வாழ்வு

000
இலை வானம் பார்க்கும்
சருகு பூமியைப் பார்க்கும்
மரம் இரண்டையும் பார்க்கும்.

000

இலை பிறப்பும் வாழ்வும்
சருகு இறப்பும் முடிவும்
மரம் இருப்பும் ஞானமும்.

000