கார்த்திக் புகழேந்தி/பாரதி மறைந்தது…..

பாரதி மறைந்தது சரியாக இரவு 1:30மணிக்கு… பொழுது விடிந்த பிறகே அவர் மரணச் செய்தி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. மரணத்தின் போது உடல் மெலிந்து ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடையில் இருந்தார்.

பாரதிக்கு மகன்கள் கிடையாது இரண்டு மகள்கள் மட்டுமே. மூத்தவர் தங்கம்மாள், இளையவர் சகுந்தலா. ஆக தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா என்பவர் தான் பாரதி உடலுக்கு எரியூட்டினார்.

பாரதி மறைந்ததும் செல்லம்மாள் தன் கணவரின் படைப்புகளை தன் சகோதரர் அப்பாத்துரையின் துணையுடன் சிறுசிறு நூல்களாக வெளியிடத் துவங்கினார். “சுதேச கீதங்கள்” என்ற இரு பாகங்களுக்குமேல் அவரால் வேறொன்றும் இயலவில்லை.

பாரதியின் படைப்புகள் அத்தனையும் வெறும் 4000ரூபாய் காப்புரிமைக்குக் கை மாறியது. அதிலும் செல்லம்மாள் வாங்கின கடன் 2,400போக மீதம் 1,600 மாதம் 200என எட்டு தவணையாகக் கொடுப்பதென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாரதியின் படைப்புகளுக்கான காப்புரிமையை வாங்கியவர் சி.விசுவநாத ஐயர்.

(செல்லம்மா பாரதி எனக் கையொப்பமிட்ட அந்த ஐம்பது பைசா பத்திரத்தின் பிரதிகளைச் சில நாட்கள் முன்பு கையில் பெற்ற போது இனம்புரியாத உணர்வு எனக்குள்)

ஆனால், உலக சரித்திரத்திலே நடைபெறாத இலக்கிய பரிமாற்றமாக விசுவநாத ஐயரிடமிருந்து காப்புரிமையை வாங்கி 1949ல் பாரதி மறைந்து 27வது ஆண்டில் அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது அரசாங்கம்.

கடையத்தில் தன் கடைசி வரை வாழ்ந்தார் செல்லம்மாள். தன் பேரப்பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்று செல்லம்மாள் அளவில்லாத தாகத்தோடு இறைஞ்சினதை அவருடைய மூத்தமகள் தங்கம்மாளின் மகளும், பாரதியின் பேத்தியுமான டாக்டர். எஸ்.விஜயபாரதி தன் நினைவுகளில் இருந்து குறிப்பிடுகின்றார்.

தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள். இன்றைக்கு அவரது பேத்தி டாக்டர்.எஸ்.விஜயபாரதி காப்புரிமை குறித்த பன்னாட்டு வழக்கறிஞராக கனடாவில் மகள்களோடு வசிக்கின்றார்.

பாரதியோ நம் எல்லோரிடையேயுமாக பெயர்களிலும், தெருக்களிலும், நகர்களிலும், ஊர்களிலும், கவிதையிலும், காட்சியிலும், வார்த்தையிலும், வரிகளிலும் நெஞ்சுரத்திலும் நீங்காமல் வாழ்கின்றான்….

ஆம் எம் கவிஞனுக்கு மரணமில்லை…

May be an image of 2 people

All reactions: