மழை

எஸ் வி வேணுகோபாலன்

காலை எழுந்து பார்க்கையில்
மழை பெய்து கொண்டிருக்கிறது

தெருவைப் பார்த்தால்
மழை எப்போதிலிருந்தோ பெய்து கொண்டிருக்கிறது.

மழை என்பது துளிகளின் கூட்டு வருகை
மழை என்பது வானத்தின் திடீர் சிலிர்ப்பு
மழை என்பது
மேகங்களின் திடீர் பரவசம்

துளிகள் ஒன்றையொன்று துரத்தித் துரத்திப் பிடிக்கப் போன

வேகத்தில் கம்பிகளாகிக்
கம்பிகள் ஒன்றையொன்று பிடிக்கப் போன வேகத்தில்
தழைகளாகித்
தழைகள் ஒன்றையொன்று தேடிப் பிடித்துத் தரையில்

இறங்கி
ததிங் கிண தோம் ததீம் ததீம் என்ற
பதங்கள் போடுகையில்
சடக்கென்று
கம்பிகளாகிக்
கம்பிகள் துளிகளாகித்
தரை தொட்ட மாத்திரத்தில்
தாரை தாரையாய்ப்
பெருகிய வெள்ளம்

ஓடிக் கொண்டிருந்தது தெருவில் –
உற்றுப் பார்த்தால் நம் பக்கம் திரும்பி வம்புக்கு இழுக்கும்

முரடன் போல்
வீடு நோக்கித் திரும்பி உள்ளே வந்து கொண்டிருக்கிறது

துளியா
கம்பியா
தழையா
என்று உணர முடியாத
வெள்ளம்

தெருவின் கழிவுகள் அடித்துத் துடைத்து எடுத்துச் செல்லும்

மழை,
எமது வீட்டையும் துடைத்தெடுக்க வந்ததாக
ஓவென்று
அலறிக் கொண்டிருந்தது பெருங்கூட்டம்

மழை அவர்களுக்கு
துளியோ
கம்பியோ
தழையோ அல்ல
உலக்கை !

25 Comments on “மழை”

  1. மிகச் சிறப்பான கவிதை நல்ல வர்ணனை சிறந்த சொல்லாக்கம் நன்றி கவிஞர் அவர்களுக்கு

    1. கவிதையும் தங்களிடம் சிறப்பாக ஆகிவிட்டது. தற்போதைய மழையில் இந்த மழை வர்ணனை(மழையாக) வேடிக்கை பார்க்க அதே வார்த்தைகளாக ஓடுகிறது. நன்றி. மகிழ்ச்சி🎅🎄

    2. ஆம்… மழை உலகை காக்கும் இயற்கையின் நம்பிக்கை! இயற்கையை சீண்டினால் உலக்கை தான்!

    3. //மழை அவர்களுக்கு
      துளியோ
      கம்பியோ
      தழையோஅல்ல
      உலக்கை //

      அளவு மாற்றம் குணமாற்றத்தை தரும் என்கிற தத்துவத்தை மீண்டும் மீண்டும் சென்னை நிரூபிக்கிறது…. அதில் பராங்கசபுரம் தெருவும் விதிவிலக்கல்ல..
      ஆனால் இந்த நேரத்திலும் கவிதை பிறந்ததுதான் அருமை தோழர்..

  2. மழை
    ஒன்று ஒன்றாய், இரண்டாய்……. நூறாய் இருந்தால் ரசிப்பு
    லட்சம் லட்சமாய் மாறினால்
    ஏற்படும் மிகப்பெரிய இழப்பு.

    இதை நன்று வெளிப்படுத்தியுள்ளீர்

  3. *என் கவிதை_மழை*
    அளவோடு பெய்தால் அருமை
    அளவுக்கு மிஞ்சினால்‌ கொடுமை

    தண்ணீரில் மிதக்கும் வீடுகள்
    கண்ணீரில் தவிக்கும் மக்கள்
    வெள்ளத்தில் ஊரடங்கு உத்தரவு

    அடை மழை காக்கும் குடை☔
    அளவுக்கு மிஞ்சினால்‌ உடையும் மடை
    வெள்ளம் மூலம் மக்கள் படை 👐

    குடிநீருக்காக முன்பு காத்திருக்கிறேன் ☝️
    மழைநீருக்காக இன்று ஒதுங்கினேன் 😭
    இயற்கையை நிறுத்த வேண்டினேன் 👏
    பல நிறங்களில் வானவில் 🌈
    கறுப்பு நிறத்தில் பாதுகாவலன் ☂️
    வெயில் மழையில் துணைவன் 👌

    எஸ் வீ ராகவன் சென்னை
    அலைபேசி 994022755

  4. முடிவு அபாரம்.இடையில் பாரதியின் தாளகதி. ‘உற்றுப் பார்த்தால் முரடன் ‘ புதிய உவமை.

  5. சுவாரஸ்யமாக இருப்பது எங்களுக்கு சிக்கலைத் தருகிறது. இதை உங்கள் கவிதையில் எளிமையாகவும் நல்ல முறையிலும் விவரிக்கிறீர்கள். மிகவும் நன்று.

  6. மழையில் முளைத்த காளான்-உன்
    சொல்லிழையில் நெய்த புடவை-அதில்
    சரிகையாய் மழை கம்பி..உன்
    புதிய கவிதையில் மழைவாசம்..

    ஒரு கவிதை படிக்கும் போது நம் மனதில் தோன்றும் மற்றொரு கவிதை….
    நல்ல ரசனை.. கவிதை அருமை…

  7. கள்ளம் கபடம் அற்ற‌ குழந்தைகள் எல்லாவற்றாலும் ஆகர்ஷிக்கப்படுவது போல் தங்களை எல்லாமும் கவர்ந்து விடுகிறது. முடிவு: இயலாகவும், இசையாகவும், நாடகமாகவும் வெளிப்பட்டு எங்களை நுகரவோராக ஆக்கி விடுகிறது.

  8. அனுபவித்து எழுதி இருக்கும் கவிதை. படிக்கையில் தூரலில் நனைந்த பரவசம். நன்று

    ஹேமலதா

    1. சில சமயங்களில்
      நீரோடு அழியும் உலகு
      ஆழிப்பெரு வெள்ளம்
      அமைதியை அலைக்கழிக்கும்
      போட்டலுங்களுக்காக
      மாடி தேடும் பசித்த வயிறு..
      **
      அருமையான கிரியா ஊக்கி இந்த கவிதை
      **
      சிறகு இரவி

  9. எதுவும் தேவைக்கு அதிகமாக இருந்தால் ஆபத்து தான். மழை மட்டும் விதி விலக்காக இருக்குமா என்று என்ன வைக்கிறது கவிதை

  10. //மழை அவர்களுக்கு
    துளியோ
    கம்பியோ
    தழையோஅல்ல
    உலக்கை //

    அளவு மாற்றம் குணமாற்றத்தை தரும் என்கிற தத்துவத்தை மீண்டும் மீண்டும் சென்னை நிரூபிக்கிறது…. அதில் பராங்கசபுரம் தெருவும் விதிவிலக்கல்ல..
    ஆனால் இந்த நேரத்திலும் கவிதை பிறந்ததுதான் அருமை தோழர்..

Comments are closed.