தங்கேஸ் கவிதை

நிலமற்ற விதை
கடைசியில்
வந்து விழுகிறது
மனதில்

சடுதியில்
வளர்ந்து கிளை பரப்பி
நெடிதேகிப் போகிறது
விண்ணை முட்ட

ஒன்றிலிருந்து மற்றொன்று
நூறிலிருந்து ஆயிரம்
பிறகு ஆயிரமாயிரம்
கோடிகள் என
வனமாகிறது
அது

பூத்துச் சொரியும் அதன்
கிளைகளிலிருந்து உதிரும்
ஒரு பூ
உன்னை வந்தடைய
ஒளியாண்டுகளாகலாம்
அல்லது வாராமலே கூட
போகலாம்

ஆனாலும் அது உன்மரம் தான்

நீ அதை தேடுகிறாயோ
இல்லையோ

அது உன்னை
தேடிக் கொண்டேதான்
இருக்கிறது