சனாதனக் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி!/வானவில் கே ரவி

“சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதன் சில கோட்பாடுகள், அதாவது, பெண்களைக் கல்வி கற்கவிடாமல் தடுப்பது, உடன்கட்டை ஏறும் வழக்கம், குலக்கல்வி முறை இவை முற்போக்கானவை அல்ல. மக்களுக்குள் எந்தப் பிரிவினையும் இருக்கக் கூடாது, தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். இவையெல்லாம் சனாதனத்தில் சொல்லப்படுவதால், அதை எதிர்க்கிறோம்.”

“We don’t oppose those who follow Sanatana Dharma. But some of its principles, such as not allowing women to be educated, ‘sati pratha’, and ‘kula kalvi’ are not progressive. We say that there should be no division among people and want to eradicate untouchability. As all this is mentioned in Sanatana, we oppose it.”

————————

நான் சொல்லலே சாமி! அதிகார பூர்மாக, விளக்கமாகச் சொல்லப்பட்டு விட்டது! புரிந்ததா?

சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இனிமேல் பெண்களைக் கல்வி கற்கச் செய்ய வேண்டும். அமைச்சர்களாக, நிதியமைச்சராக, இஸ்ரோ போன்ற அறிவியல் கழகங்களில் பொறுப்புள்ள அதிகாரிகளாக, வங்கிகளில் உயர் அதிகாரிகளாக, ஏன், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக உயர் பொறுப்புகளில் இதுவரை சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மகளிர் எவரும் வரவே இல்லை என்ற குறையை இப்பொழுதே நிவர்த்தி செய்ய வேண்டும். இனிமேல் இப்படிப்பட்ட பதவிகளுக்குப் பெண்கள் வருமாறு பெண்களைக் கல்வி கற்கச் செய்ய வேண்டும்.

புரிகிறதா? புரியலேன்னா அது என் தப்பு இல்லே சாமி!

சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள்
உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். வீட்டுக்கு வீடு இந்த வழக்கத்தால் தினம் எத்தனை ஆயிரம் பெண்கள் செத்து மடிகிறார்கள்! இன்னுமா உங்களுக்கு அறிவு வரவில்லை? இந்த வழக்கத்தை உடன்கட்டையாக, மன்னிக்கவும், உடனடியாக விட்டுவிட வேண்டும். (என்னாது, ராஜாராம் மோகன் ராயா? கேள்விப் பட்டதே இல்லியேப்பா)

சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள்
குலக்கல்வி முறையை உடனே ஒழிக்க வேண்டும். புரோகிதர் மகன் புரோகிதம்தான் பயில வேண்டுமா? டாக்டராகக் கூடாதா? அவர்கள் என்ன அரசியல்வாதிகளா, அமைச்சர் மகன் அல்லது மகள் அமைச்சர் ஆவதற்கு? இனிமேல் புரோகிதர்கள் தங்கள் வாரிசுகளைச் சட்டம், மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயிற்றுவிக்க வேண்டும், அதற்கான இடம் கிடைக்காமல் போனால் பிச்சை எடுத்துப் பிழைக்கவாவது கற்றுத்தர வேண்டும். புரோகிதர்களுடைய மகன் புரோகிதர் ஆகிக் கஷ்டப்படக் கூடாது என்பதால் எல்லாரும், மகளிர் உட்படப் புரோகிதர் ஆகலாம் என்று சட்டம் இயற்ற வேண்டும். ஓ! இயற்றி விட்டோம்!

புரிகிறதா?

மக்களுக்குள் எந்தப் பிரிவினையும் கூடாது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களிலும், உபநிதடங்களிலும், பிரும்ம சூத்திரத்திலும், பகவத் கீதையிலும் பிராமணர், முதலியார், நாடார், வன்னியர், கவுண்டர், நாயுடு, நாயக்கர், மறவர், கள்ளர், பறையர், பள்ளர் என்றெல்லாம் வரிக்கு வரி சொல்லப் பட்டுள்ள நூற்றுக் கணக்கான ஜாதிப் பெயர்களை உடனே ஒழிக்க வேண்டும். தீண்டாமை அறவே ஒழிய வேண்டும். வேதங்களில் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ள இரட்டைக் குவளை முறையாகிய சனாதனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.
( என்ன? நான் வேதம் படித்ததில்லையா? அதில் ஆராய்ச்சியே செய்திருக்கிறேனாக்கும்!)
எல்லாரும், எல்லா இடங்களிலும் கால் அணி அணிந்து நடக்க அனுமதிக்க வேண்டும். எல்லாப் பெண்களும் மேலாடை அணிய அனுமதிக்க வேண்டும். தர்மத்தை ஒழிப்பேன் என்று பேசலாமே தவிர ஜாதிப் பெயர் சொல்லி யாரும் யாரையும் இழிவாகப் பேசுதல் குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.

இனிமேல் தமிழ்நாடு, சனாதனமற்ற சமதர்ம, சமாதான, சமுதாயமாக சதாகாலமும் பூத்துக் குலுங்கப் போகிறது.

நாங்கள் சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை. சனாதன தர்மத்தைத்தான் ஒழிக்கச் சொன்னோம்.

இதுக்குப்போய் இன்னா கூச்சல்! பேஜாராப் போச்சுப்பா.

இனிமே எல்லாரும் கப்சிப் ஆயிடுவாங்க பிரதர். சரிதானே?

3 Comments on “சனாதனக் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி!/வானவில் கே ரவி”

Comments are closed.