கம்பனைக் காண்போம்—8

கோவை எழிலன்


மாமனும் மருமகனும்

மேகங்கள் மழைபொழிவதற்காக இமயமலை மேல் போய்ப் படிந்தன. அம்மலையிலிருந்து தோன்றி வரும் கங்கையானது கடலில் போய்க் கலக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைக் கம்பன் மிக அழகாக நயம் தோன்றக் காட்டுகிறான். இமயமலையின் மகள்தான் கங்கையாறாம். அந்த மகள் கடலான ஆண்மகனைப் போய் மணந்து கொள்கிறாள். எனவே இமயமலை கடலுக்கு மாமன் முறை ஆகிறது. அந்த இமயமலையானது கதிரவனால் வெப்பம் அடைகிறது. தன் மாமனாகிய இமயமலை சூரியனால் வெப்பம் அடைந்தான். அவ்வெப்பத்தைத் தன் அன்பினால் மாற்றுவோம் என எண்ணிக் கடலானது மேகமாய் மாறி இமயமலையின் மேல் போய்ப் படிந்ததாம். அழகான பாட்டு இது.


பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே [15]


[பம்பி=எழுந்து; பரந்தது=படிந்தது; பானு=சூரியன்; மாதுலன்=மாமன்; நண்ணினான்=அடைந்தான்; அம்பின்=அன்பின்; அகன்=அகன்ற; இம்பர்வாரி=கடலின் மேகம்]