
27.09..2023 – புதன் கிழமை
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வரும் வாரம் வெள்ளிக்கிழமை, விக்ரமாதித்யன் கவிதைகளை வாசிக்கப் போகிறீர்களா?
அழகியசிங்கர் : ஆமாம். அவருடைய பிறந்தநாள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வந்தது. கவிதை எழுதுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் தன் வாழ்நாள் முழுவதும் கவிதைகள் எழுதியவர். அதைப் பற்றி சிந்தித்தவர். அவரை மதிக்கிறேன்.
ஜெகன் : போதையும் கவிதையும்தான் அவர் உலகம்.
மோகினி : அவருடைய கவிதைப் புத்தகங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்களா?
அழகியசிங்கர் : வைத்திருக்கிறேன். விருட்சம் பத்திரிகை கவிதைக்கான பத்திரிகை. முன்பெல்லாம் தபால் கார்டில் கவிதைகள் எழுதி அனுப்பி விடுவார் விருட்சத்திற்கு.
மோகினி : தபால் கார்டிலா?
அழகியசிங்கர் : ஆமாம். தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். எழுதுவதெல்லாவற்றையும் அவர் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவார்.
ஜெகன் : உண்மைதான்.
அழகியசிங்கர் : சாகித்திய அக்காதெமி பரிசுக்கு தமிழவன் பெயரைக் குறிப்பிட்டதுபோல் விக்ரமாதித்யன் பெயரையும் குறிப்பிட விரும்புகிறேன்.
மோகினி : நடக்கிறதுதான் நடக்கும். உங்கள் பரிந்துரையினால் ஒரு பயனும் இல்லை.
அழகியசிங்கர் : தெரிந்துதான் பெயர்களைக் குறிப்பிடுகிறேன்.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
(இரவு 10.30 மணிக்கு)
