07.11.2021 – ஞாயிறு
ஆசிரியர் பக்கம்
அழகியசிங்கர்
மோகினி : ஒரே மழை.
அழகியசிங்கர் : ஆமாம். எனக்குத் தெரியவில்லை. வீட்டைவிட்டு வெளியே போகவில்லை.
ஜெகன் : கோவிந்தன் ரோடில் முழங்கால் வரை தண்ணீர்.
அழகியசிங்கர் : நான் போய்ப் பார்க்க வில்லை. என் கதை தினமணி கதிரில் இன்று பிரசுரமாகியிருந்தது.
மோகினி : ‘அப்பாவின் அறை’ என்ற கதையா?
அழகியசிங்கர் : ஆமாம். இரண்டு வருடங்களுக்கு முன் எழுதியது.
ஜெகன் : இப்போதாவது பிரசுரமானதென்று சந்தோசப்படுங்கள்.
மோகினி : தினமணி கதிர்-சிவசங்கரி சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் அனுப்பிய கதைதானே.
ஜெகன் : ஆமாம். அழகியசிங்கர் அதற்குத்தான் அனுப்பினார்.
அழகியசிங்கர் : அந்தக் கதைக்கு எந்தப் பரிசும் தரவில்லை. ஆனால் என் கற்பனையோ அதற்கு எதாவது பரிசு கிடைத்திருக்க வேண்டுமென்று தோன்றியது.
மோகினி : ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எந்த அளவிற்குக் கதையைத் தேர்ந்தெடுக்கத் திறமை வாய்ந்தவர்கள் என்று தெரியாது.
ஜெகன் : தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் வருத்தமா
மோகினி : வருத்தம் இல்லாமல் இருக்காது.
அழகியசிங்கர் : வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்? நான் உண்மையிலேயே அதிகமாகக் கதைகள் எழுதுபவன் இல்லை.
மோகினி : யாராவது கதை வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்.
ஜெகன் : உடனே எழுதிக் கொடுத்து விடலாம்.
அழகியசிங்கர் : உண்மையில் அப்படி எழுதிக் கொடுத்து விட முடியும்தான். எதாவது ஒன்றை எழுது எழுது என்று யோசித்து எழுதி விடலாம்.
மோகினி : கதையை எல்லோரும் தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது வழக்கம் தானே?
அழகியசிங்கர் : ஆமாம். இதோ இப்போதே ஒரு கதை எழுத ஆரம்பிக்கிறேன். எவ்வளவு நாள் ஆகிறது என்று பார்க்கலாம்.
ஜெகன் : இன்று போதும்.
மோகினி : நம் சபையைக் கலைத்து விடலாம்.
அழகியசிங்கர் : நல்ல இரவு மலரட்டும்.