ரூமி கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

காதல் திடீரென்று வந்து
உங்கள் ஜன்னலைத் தட்டும்போது
ஓடிவந்து அதை
உள்ளே அழையுங்கள்
ஆனால் அதற்கும் முன்பாக
உங்கள் தர்க்கஅறிவின் கதவை மூடுங்கள்.
காலையில் வீசும் மென்காற்றின்
புத்துணர்ச்சியை மூழ்கடிக்கும் புகையினைப் போல
சிறிய சைகை கூட காதலை விரட்டிவிடும்.
உனக்கு இப்பாதை தடைசெய்யப்பட்டுள்ளது,
நீ கடந்து செல்ல முடியாது என்று
அறிவை நோக்கி காதல் மாத்திரமே
கூறவியலும்
ஆனால் காதலருக்கோ
அது நூறு ஆசீர்வாதங்களை
அள்ளி வழங்குகிறது.
உள்ளம் ஓரடி எடுத்து வைக்கும் முன்
காதல் ஏழாவது வானத்தை அடைந்துவிடுகிறது.
எப்படி என்பதை மனம் கண்டறியும் முன்பாக
காதல் புனித மலையை ஏறிவிடுகிறது.
இப்பொழுதே இந்த பேச்சை
இடைநிறுத்தி விட்டு,
தனது மெளனத்தின் கூட்டிலிருந்து
பேசுவதற்கு காதலை
நான் அனுமதிக்கவேண்டும்.