
காற்று தூக்கும் குடையில்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
சேற்றைச் சாடும் வாகனச்
சக்கரத்திற்கு
ஒதுங்கிக் கொண்டு
தொப்பலாக நனைந்தபடி
வந்து சேர்ந்து
தலை துவட்டும் நேரத்தில்
ஒரு தவிப்பு
கார வடையும்
கருப்பட்டிக் காபியுமாய்
சன்னல் ஓரம் அமர்ந்து
வானம் ஒழுகுவதைப் பார்த்தபடி
சாய்ந்து கிடக்கும்போது
ஒரு சலனம்
நேற்று
சொட்டுத் தண்ணீர் சிந்தாமல்
கவனமாய்ப் பிடித்து வந்த
கலர்க் குடங்கள் – இங்கே
இன்று
குடம் குடமாய் மேகம்
கொட்டிய நீரெல்லாம் தெருவில்
குண்டாங் குழிகளில்
கறுப்புக் குளங்களாய் – அங்கே
—————————-
