நாகேந்திர பாரதி/அலைகள்

மண்ணுக்குள் புதைகின்ற பாதத்தில்
பூவுக்குள் போவது போல் புல்லரிப்பு

கடல் நீரில் கால் நனைக்கும் சில்லிப்பு
கடற் காற்றில் உடலுக்குள் சிலிர்ப்பு

எண்ணிக்கை அடங்காத நீர்க்கூட்டம்
எழும்பிவரும் அலையாக ஒயிலாட்டம்

தானாகப் போட்டு விட்ட கரைக்குள்ளே
தள்ளாடி அலையாடும் நுரைக்குள்ளே

கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்தில்
கை காட்டி வருகின்ற சிறு படகு

மீனோடு வலையோடு கட்டு மரம்
மீண்டு கரை சேருவது சாமி வரம்

அலைப்பேச்சுப் பேசுகின்ற கடலுக்குள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்கள் எத்தனையோ

கொலை வெறியில் எழுந்து வந்த சுனாமி கூட
குடலுக்குள் ஒளிந்திருந்த பாம்பு தானே

பழைய கதை மறக்காமல் போய் வருவோம்
பத்திரமாய்க் கடலாடிக் கரை சேர்வோம்

விலையாக உயிர் கொடுத்த வேதனையை
வீசுகின்ற கடற் காற்று ஆற்றிடுமா

———————————————