நாகேந்திர பாரதி/தாத்தாவும் பேரனே

விரலைப் பிடித்து இழுக்கும்
பேரனுக்குத் தெரியுமா

அறுபது வருடங்களுக்கு முன்னால்
அவரும் அவனைப் போலத்தான்

சிவப்புக் காராச்சேவை
ட்ரவுசர் பாக்கெட்டில் அமுக்கிக் கொண்டு

ஈர சவ்வு மிட்டாயை
கடிகாரமாய்க் கட்டிக்கொண்டு

தெருவில் நிறைந்திருக்கும் கார் கண்ணாடியில்
முகத்தைப் பார்த்துக் கொண்டு

கோயில் வரிசையில் சாமி பார்க்க
முந்திக் கொண்டு

சூட வாசத்தில் மூக்கை
உறிஞ்சிக் கொண்டு

சுண்டலும் புளியோதரையும்
கை நிறைய வாங்கிக் கொண்டு

சுற்றுப் பிரகாரத்தில் சொல்லாமல்
ஓடிக் கொண்டு

வா தாத்தா வா வா என்று
மழலையில் அதட்டிக் கொண்டு

அவருக்கும் தாத்தா நினைவு
கண்களில் ததும்பியது

————————-